IND vs NZ: ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் 2025 (ICC Champions Trophy 2025) தற்போது உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. குரூப் ஏ-வில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் (India vs New Zealand) அரையிறுதி சுற்றுக்கு தகுதிபெற்றுள்ளன. வங்கதேசம் மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி மழை காரணாக மொத்தமாக தடைப்பட்டது. இதனால் இரு அணிகளும் ஆறுதலாக 1 புள்ளியை பெற்றன.
IND vs AFG: உச்சக்கட்டத்தில் சாம்பியன்ஸ் டிராபி
குரூப் பி-இல் இனி நடைபெற இருக்கும் 2 போட்டிகளும் முக்கியத்துவம் பெறுகிறது. நாளை நடைபெறும் ஆஸ்திரேலியா – ஆப்கானிஸ்தான் (Australia vs Afghanistan) போட்டியில் வெற்றிபெறும் அணியே அரையிறுதிக்குச் செல்லும். தென்னாப்பிரிக்கா அணி ஏறத்தாழ அரையிறுதிக்கு தகுதிபெற்றுவிட்டாலும் இங்கிலாந்து போட்டியிலும் வென்றால் 7 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடிக்கும்.
இதுஒருபுறம் இருக்க, இந்திய அணி (Team India) அதன் கடைசி குரூப் சுற்று போட்டியில் நியூசிலாந்து அணியுடன் வரும் மார்ச் 2ஆம் தேதி அன்று (ஞாயிறு) மோத இருக்கிறது. சம்பிரதாய போட்டியாக இருந்தாலும், புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை பிடிக்க இரு அணிகளும் வெற்றி பெற வேண்டிய முனைப்பில் இருக்கும். மேலும், இந்திய அணி நியூசிலாந்து (Team New Zealand) போன்ற பலமிக்க அணியை வீழ்த்துவதால், நாக்-அவுட் சுற்றிலும் அபரிமிதமான நம்பிக்கையை அளிக்கும்.
IND vs NZ: ரோஹித் சர்மா கிடையாது…?
ஆனால், நியூசிலாந்து போட்டிக்கு முன்பு இந்திய அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தும் வகையிலான தகவல்கள் வெளியாகி உள்ளன. பின்தொடைப் பகுதியில் பிடிப்பு காரணமாக கேப்டன் ரோஹித் சர்மா (Rohit Sharma) நியூசிலாந்து போட்டியை விளையாட மாட்டார் என கூறப்படுகிறது. அவர் விளையாடாவிட்டால் சுப்மன் கில் (Shubman Gill) கேப்டன்ஸியை பெறுவார் என கூறப்படுகிறது. சுப்மன் கில்லுக்கும் உடல்நலக்குறைவால் வலைப்பயிற்சிக்கு வரவில்லை என கூறப்பட்ட நிலையில், அவர் உள்அரங்கு பயிற்சியில் ஈடுபட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
#TeamIndia | #ChampionsTrophy pic.twitter.com/YpL0V6aCKw
— BCCI (@BCCI) February 27, 2025
IND vs NZ: இந்திய அணியின் பிளேயிங் லெவன் மாற்றங்கள்
ரோஹித் ஒருவேளை இல்லையெனில், கேஎல் ராகுல் ஓப்பனராக இறங்க வாய்ப்புள்ளது. மிடில் ஆர்டர் நம்பர் 5இல் ரிஷப் பண்ட் (Rishabh Pant) இறக்கப்படலாம். அதே வேளையில், ஹர்ஷித் ராணாவுக்கு ஓய்வளித்துவிட்டு, அர்ஷ்தீப் சிங்கை உள்ளே கொண்டுவர இதுதான் நல்ல வாய்ப்பாகும். ஹர்ஷித் ராணா மிடில் ஓவர்களிலும் பெரியளவில் கைக்கொடுக்க தவறுகிறார் என்ற நிலையில் அவருக்கு பதில் இந்த போட்டியில் அர்ஷ்தீப் சிங்கை (Arshdeep Singh) முயற்சிக்கலாம்.
IND vs NZ: வருண் சக்ரவர்த்தியை ஏன் கண்டிப்பாக சேர்க்க வேண்டும்?
ஆனால், இதை விட வருண் சக்ரவர்த்தியை (Varun Chakaravarthy) பிளேயிங் லெவனுக்குள் கொண்டுவருவதுதான் முக்கியமான மாற்றமாக இருக்கும் என்கின்றனர் வல்லுநர்கள். காரணம், நியூசிலாந்து டாப் ஆர்டர் பேட்டர்கள் அனைவரும் சுழற்பந்துவீச்சை சிறப்பாக ஆடக்கூடியவர்கள். வில் யங், டெவான் கான்வே, ரச்சின் ரவீந்திரா, கேன் வில்லியம்சன், டாம் லதாம் உள்ளிட்டோர் சுழற்பந்துவீச்சை எதிர்கொள்ள சிறப்பான ஷாட்களை கைவசம் வைத்திருப்பவர்கள். ஸ்வீப், ரிவர்ஸ் ஸ்வீப் உள்ளிட்ட ஷாட்களை அடிக்கடி விளையாடி ஸ்பின்னர்களை திக்குமுக்காட வைப்பார்கள். சமீபத்தில், இந்திய மண்ணில் 3 டெஸ்ட் போட்டிகளையும் அவர்கள் வென்றதும் இப்படிதான்.
எனவே, இந்திய அணி வழக்கமான சுழற்பந்துவீச்சாளராக ஜடேஜா, அக்சர் பட்டேல், குல்தீப் யாதவுடன் சென்றால் மிடில் ஓவர்களில் அதிக ரன்களை கொடுக்க வேண்டியிருக்கும். ஏற்கெனவே மிடில் ஓவர்களில் விக்கெட்டுகள் விழாதது இந்திய அணிக்கு பெரிய பலவீனமாக பார்க்கப்படுகிறது. எனவே, வருண் சக்ரவர்த்தியை சேர்த்தால் நியூசிலாந்து வீரர்களுக்கு நிச்சயம் அவர்களின் ஷாட்களை விளையாடுவதில் சிரமம் ஏற்படும். வருண் சக்ரவர்த்தியின் மர்ம சுழல் அவர்களின் இயல்பான ஆட்டத்தை பாதிக்கலாம். இதனால் ஒருமுனையில் அழுத்தம் அதிகமாகி, மறுமுனையில் விக்கெட்டுகள் சரியலாம். குல்தீப் யாதவிற்கு (Kuldeep Yadav) இந்த போட்டியில் ஓய்வளித்துவிட்டு வருண் சக்ரவர்த்திக்கு வாய்ப்பளிப்பதே சரியான நகர்வாக இருக்கும்.