புதுடெல்லி: அமெரிக்காவில் விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இந்திய மாணவி நீலம் ஷிண்டேவை பார்வையிட அவரது தந்தைக்கு விரைவில் விசா கிடைக்க வெளியுறவுத்துறை அமைச்சகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
மகாராஷ்ராவைச் சேர்ந்தவர் நீலம் ஷிண்டே. அமெரிக்காவில் படிக்கும் இவர் விபத்தில் சிக்கி மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனால் அவரை பார்வையிட அவரது தந்தை தனாஜி ஷிண்டே, அவசர விசா கேட்டு அமெரிக்க துணை தூதரகத்தில் விண்ணப்பித்துள்ளார்.
இந்த விஷயத்தை வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரின் கவனத்துக்கு கொண்டு சென்ற தேசியவாத காங்கிரஸ் எம்.பி சுப்ரியா சுலே, மாணவியின் தந்தைக்கு விரைவில் விசா கிடைக்க நடவடிக்கை எடுக்கும்படி வலியுறுத்தியுள்ளார். வெளியுறவுத்துறை இந்த விஷயத்தில் தலையிட்டதையடுத்து, தனாஜி ஷிண்டேவுக்கு விரைவில் விசா கிடைக்க அமெரிக்க தூதரக அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.