சத்தீஷ்காரில் தடை செய்யப்பட்ட நக்சல் இயக்க தலைவர் கைது

புதுடெல்லி,

சத்தீஷ்காரில் பயங்கரவாதத்திற்கு நிதி அளித்த வழக்கை தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) அமைப்பு கடந்த ஆண்டு பிப்ரவரி முதல் விசாரணை நடத்தி வருகிறது. இதில், சத்தீஷ்கார் அரசால் தடை செய்யப்பட்ட மூல்வாசி பச்சாவோ மன்ச் (எம்.பி.எம்.) என்ற நக்சல் அமைப்பை சேர்ந்த ரகு மிதியாமி என்பவரை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

இதுபற்றி என்.ஐ.ஏ. அமைப்பு இன்று வெளியிட்ட அறிக்கையில், இந்த தடை செய்யப்பட்ட எம்.பி.எம். என்ற அமைப்பானது நிதி சேகரிப்பு, பதுக்கி வைத்தல் மற்றும் தேச விரோத செயலுக்காக சி.பி.ஐ. (மாவோயிஸ்டு) அமைப்புக்கு நிதி விநியோகம் செய்தல் உள்ளிட்ட வேலைகளில் ஈடுபட்டு வந்துள்ளது.

சி.பி.ஐ. (மாவோயிஸ்டு) அமைப்பினரின் தலைமையிலான போராட்டங்களுக்கு தொடர்ச்சியாக நிதி கிடைக்க வழி செய்யும் வகையில் மிதியாமி முக்கிய நபராக செயல்பட்டு வந்துள்ளார் என என்.ஐ.ஏ. விசாரணையில் தெரிய வந்து உள்ளது என அந்த அறிக்கை தெரிவிக்கின்றது.

தொடர் விசாரணையில், அவர் எம்.பி.எம். இயக்க தலைவராகவும் இருப்பது தெரிந்தது என்றும் அந்த அறிக்கை தெரிவித்து உள்ளது. இந்த வழக்கில் கடந்த 2023-ம் ஆண்டு நவம்பரில் 2 பேர் சத்தீஷ்கார் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். ரூ.6 லட்சம் பணமும் பறிமுதல் செய்யப்பட்டது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.