SEBI Chief : 'அறிவிக்கப்பட்ட அடுத்த செபி தலைவர்!' – யார் இந்த துஹின் காந்தா பாண்டே?!

இன்றோடு தற்போதைய செபி தலைவர் மாதபி பூரி புச்சின் பணிக்காலம் முடிவடைகிறது.

இதையொட்டி, அடுத்த செபி தலைவராக தற்போது நிதி செயலாளராக இருக்கும் துஹின் காந்தா பாண்டே நியமிக்கப்பட்டுள்ளார். செபி தலைவரின் பணிக்காலம் மூன்று ஆண்டுகள் ஆகும். துஹின் 2028-ம் ஆண்டுவரை இந்தப் பொறுப்பில் தொடர்வார்.

பஞ்சாப்பைச் சேர்ந்தவர் துஹின் காந்தா பாண்டே. முன்பு இவர் ஒடிசா மாநிலத்தின் நிதிச் செயலாளராகவும், திட்டக்குழுவிலும் பணியாற்றி இருக்கிறார்.

செபி தொடங்கப்பட்டத்தில் இருந்து இதுவரை அதற்கு 11 பேர் தலைவர்களாக இருந்துள்ளனர். அதில் மாதபி பூரி புச்சை தவிர, மீதி இருந்த 10 தலைவர்களும் ஒன்று ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் அல்லது பொதுத்துறையில் இருந்து வந்தவர்கள் ஆவார்கள். இந்த வரிசையில் தற்போது துஹின் காந்தா பாண்டேவும் இணைகிறார்.

தற்போதைய இந்திய நிதி செயலாளர்…அடுத்த செபி தலைவர்!

இவர் 1987-ம் ஆண்டு பேட்ச் ஓடிசா கேடர் ஐ.ஏ.எஸ் அதிகாரி. இவர் முதலீடு மற்றும் பொது சொத்து மேலாண்மை துறை செயலாளராக முன்னர் இருந்தார். இவர் தான் அந்தத் துறையின் நீண்ட கால செயலாளர் என்ற பெருமையை இதுவரையும் தக்க வைத்துள்ளார்.

துஹின் செயலாளராக இருந்த அந்தக் காலக்கட்டத்தில் தான் ஏர் இந்தியா நிறுவனம் தனியார் மயமாக்கப்பட்டது. கடந்த செப்டம்பர் மாதம் துஹின் இந்தியாவின் நிதி செயலாளராக நியமிக்கப்பட்டிருந்தார்.

இவர் பார்க்க அமைதியாக இருந்தாலும், சட்டத் திட்டங்கள் என்று வரும்போது அதை கடுமையாகப் பின்பற்றுவார் என்று கூறப்படுகிறது. அதானி குழுமத்தின் மோசடி உள்ளிட்ட பிரச்னைகளில் அடிப்பட்டு வந்த செபி மற்றும் செபி தலைவரின் பெயர் இவர் வருகைக்கு பிறகு என்னவாக மாறும் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.