இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் கடந்தாண்டு டிசம்பர் மாதம் `விடுதலை பாகம் 2′ திரைப்படம் வெளியாகியிருந்தது.
இத்திரைப்படத்தின் ரிலீஸுக்குப் பிறகு `வாடிவாசல்’ படத்திற்கான வேலைகள் தொடங்கும் என முன்பே இயக்குநர் வெற்றிமாறன் குறிப்பிட்டிருந்தார். அப்படத்திற்கான பணிகள் தொடங்கியதை அறிவிக்கும் வகையில் தயாரிப்பாளர் தாணு வெற்றிமாறன், சூர்யாவுடனான புகைப்படத்தை சமீபத்தில் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
இசைக்கான பணியையும் தொடங்கிவிட்டதாக நேற்றைய தினம் நடைபெற்ற கிங்ஸ்டன் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் ஜி.வி.பிரகாஷ் கூறியிருந்தார். சென்னை, பல்லாவரத்தில் அமைந்துள்ள வேல்ஸ் கல்லூரியில் நடைபெற்று வரும் கல்ச்சுரல்ஸ் நிகழ்வில் சிறப்பு விருந்தினராக இயக்குநர் வெற்றிமாறன் கலந்து கொண்டார். அவர் பேசும்போது வாடிவால் படத்தின் ஷூட்டிங் அப்டேட்டையும் கொடுத்தார். அவர், “வாடிவாசல் திரைப்படத்தின் முதற்கட்டப் பணிகள் நடந்துகொண்டிருக்கிறது. மே அல்லது ஜுன் மாதம் வாடிவாசல் திரைப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பிக்கப்படும்.” என்று கூறினார்.

`வாடிவாசல்’ படத்தை தாண்டி தனுஷை வைத்து மற்றுமொரு படத்தை வெற்றிமாறன் இயக்கவிருக்கிறார். அது தொடர்பான அறிவிப்பும் `விடுதலை பாகம் 2′ திரைப்பட ரிலீஸுக்குப் பிறகு வெளியானது. சூர்யா நடித்திருக்கும் `ரெட்ரோ’ திரைப்படம் மே 1-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இதனை தாண்டி ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் உருவாகி வரும் `சூர்யா 45′ படத்தின் படப்பிடிப்பில் சூர்யா தற்போது பங்கேற்று வருகிறார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பை முடித்தப் பிறகு `வாடிவாசல்’ படத்தின் படப்பிடிப்பில் சூர்யா பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.