இடாநகர்: மேற்கு அருணாச்சலில் வசிக்கும் மோன்பா சமூகத்தை சேர்ந்த 24 வயது பெண் லீகே சோமு. வேளாண் பட்டதாரியான இவர் 200 ஆண்டுகள் பழமையான தனது மூதாதையர் வீட்டை ஒரு வாழும் அருங்காட்சியகமாக மாற்றியுள்ளார்.
இங்குள்ள கலைப்பொருட்கள் மட்டுமின்றி மண் மற்றும் கல்லைக் கொண்டு பண்டைய மோன்பா தொழில்நுட்பத்தில் கட்டப்பட்ட இந்த வீடும் ஒரு அருங்காட்சியகமாக உள்ளது. மோன்பா சமூகத்தின் கட்டிடக் கலை, வாழ்க்கை முறை மற்றும் பாரம்பரியத்தை இது காட்டுகிறது. பல நூற்றாண்டுகளுக்கு முன் மோன்பா மக்கள் எப்படி வாழ்ந்தார்கள் என்பதற்கு சான்றாக இது விளங்குகிறது.
பல மாத உழைப்புக்கு பிறகு இந்த அருங்காட்சியகம் கடந்த ஆண்டு அக்டோபர் 5-ம் தேதி முறைப்படி திறக்கப்பட்டது. அப்போது முதல் சுற்றுலாப் பயணிகள் மற்றும் கலாச்சார ஆர்வலர்கள் பலர் இங்கு வருகை தருகின்றனர்.