சென்னை: தமிழகத்தில் மார்ச் 3 ஆம் தேதி முதல் மார்ச் 6 ஆம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் 2 – 3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், “பூமத்திய ரேகையை ஒட்டிய மேற்கு இந்தியப்பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் – மாலத்தீவு வரை ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. மார்ச் 2 ஆம் தேதி தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
மார்ச் 3 ஆம் தேதி தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வடதமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். மார்ச்., 4 ஆம் தேதி முதல் மார்ச்., 8 ஆம் தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும்.
அடுத்த ஐந்து தினங்களுக்கான அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு: 24 மணி நேர அதிகபட்ச வெப்பநிலை மாறுதல்: மார்ச் 2 ஆம் தேதி தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் பெரிய மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு. மார்ச் 3 ஆம் தேதி முதல் மார்ச் 6 ஆம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை படிப்படியாக 2° செல்சியஸ் வரை உயரக்கூடும்.
இயல்பு நிலையிலிருந்து அதிகபட்ச வெப்ப அளவின் வேறுபாடு: மார்ச் 3 ஆம் தேதி முதல் மார்ச் 6 ஆம் தேதி வரை தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் 2 – 3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு: இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 34° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 34° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24-25° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை: தமிழக கடலோரப்பகுதிகள், வங்கக்கடல் பகுதிகள்: மார்ச்., 2 ஆம் தேதி முதல் மார்ச்., 6 ஆம் தேதி வரை எச்சரிக்கை ஏதுமில்லை. அரபிக்கடல் பகுதிகள்: மார்ச்., 2 ஆம் தேதி மாலத்தீவு – லட்சதீவு பகுதிகள் அதனை ஒட்டிய குமரிக்கடல் மற்றும் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
மார்ச் 3 ஆம் தேதி தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மாலத்தீவு – லட்சதீவு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மார்ச்., 4 ஆம் தேதி முதல் மார்ச்., 6 ஆம் தேதி வரை எச்சரிக்கை ஏதுமில்லை. மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.