ஆட்டநாயகன்!
சாம்பியன்ஸ் டிராபியில் நியூசிலாந்துக்கு எதிரான போட்டியை இந்திய அணி 44 ரன்கள் வித்தியாசத்தில் வென்றிருக்கிறது. இந்திய அணி சார்பில் தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி 5 விக்கெட்டுகளை எடுத்திருந்தார். வெற்றிக்குப் பெரியளவில் உதவிய வருணுக்குதான் ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

ஆட்டநாயகன் விருதை வென்றுவிட்டு வருண் சக்கரவர்த்தி பேசுகையில், “ஆரம்பத்தில் நான் கொஞ்சம் பதற்றமாக இருந்தேன். இந்திய அணிக்காக நான் அவ்வளவாக ஓடிஐ ஆடியதில்லை. அதனால்தான் பதற்றம் அடைந்தேன். ரோஹித், ஹர்திக், என அத்தனை பேரும் என்னிடம் பேசித் தேற்றினார்கள்.
நேற்று இரவுதான் நான் ஆடப்போகிறேன் என்பதே தெரியும். இந்திய அணிக்காக ஆட எப்போதுமே ஆவலுடன் காத்திருப்பேன். நான் மட்டுமே தனியாக சிறப்பாக செயல்படவில்லை. அக்சர், குல்தீப், ஜடேஜா என ஒரு அணியாக எல்லோருமே சிறப்பாக ஆடியிருக்கிறோம்.” என்றார்.

2021 டி20 உலகக்கோப்பையில் இந்திய அணிக்காக இதே துபாயில் வருண் சக்கரவர்த்தி ஆடியிருந்தார். ஆனால், சிறப்பாக ஆடாததால் அணியிலிருந்து டிராப் செய்யப்பட்டார். இப்போது அதே துபாயில் இந்திய அணிக்காக ஒரு பெரிய தொடரில் சிறப்பாக ஆடி ஆட்டநாயகன் விருதை வென்றிருக்கிறார். வாழ்த்துகள் வருண்!