பெய்ஜிங்: சீனாவின் உள்மங்கோலியா பகுதியில் 10 லட்சம் டன் தோரியம் தாது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இதன்மூலம் அந்த நாட்டின் 60,000 ஆண்டுகளுக்கு தேவையான மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும் என்று சீன விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
சீனாவின் வடக்குப் பகுதியில் உள்மங்கோலியா அமைந்துள்ளது. இது சீனாவின் தன்னாட்சி பெற்ற மாகாணம் ஆகும். அங்குள்ள பையுன் ஓபா பகுதியில் அரிய வகை தாதுக்கள் காணப்படுகின்றன. அப்பகுதியில் தற்போது 5 மிகப்பெரிய சுரங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. அவற்றில் இருந்து இரும்பு உட்பட 175 வகையான தாதுக்கள் வெட்டி எடுக்கப்படுகிறது.
பையுன் ஓபா பகுதியில் தோரியம் இருப்பு குறித்து சீன விஞ்ஞானிகள் பல ஆண்டுகளாக ஆய்வு நடத்தி வந்தனர். இந்த ஆய்வு சமீபத்தில் நிறைவு செய்யப்பட்டு சீன அரசிடம் விரிவான அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு உள்ளது. இதன்படி பையுன் ஓபா பகுதியில் சுமார் 10 லட்சம் டன் தோரியம் இருப்பதாக கணக்கிடப்பட்டு உள்ளது. இதன்மூலம் அந்த நாட்டின் 60,000 ஆண்டுகளுக்கு தேவையான மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும் என்று சீன விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து சர்வதேச அணு சக்தி விஞ்ஞானிகள் மேலும் கூறியதாவது: அணு மின் உற்பத்தியில் யுரேனியம், புளூட்டோனியம் தாதுக்களுக்கு அடுத்ததாக தோரியம் தாது மிக முக்கிய பங்கு வகிக்கிறது. தோரியத்தை பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் அணு மின் உற்பத்தியின்போது சுற்றுச்சூழல் பெரிய அளவில் பாதிக்கப்படாது.மின் உற்பத்தி செலவு குறையும்.
அணு மின் சக்தி தொழில்நுட்பத்தில் அமெரிக்கா, ரஷ்யா, சீனா இடையே போட்டி நிலவுகிறது. இந்த சூழலில் சீனாவில் பெருவாரியான தோரியம் கண்டுபிடிக்கப்பட்டு இருப்பது அந்த நாட்டுக்கு மிகப்பெரிய ஊக்க சக்தியாக அமையும். சீனாவின் கோபி பாலைவனம் பகுதியில் தோரியம் அணு மின் நிலையத்தை அந்த நாட்டு அரசு அமைத்து வருகிறது. இந்த அணு மின் நிலையம் வரும் 2029-ம் ஆண்டு முதல் செயல்படத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதேபோல பல்வேறு பகுதிகளில் தோரியம் அணு மின் நிலையங்களை அமைக்க சீனா திட்டமிட்டுள்ளது. யுரேனியத்துடன் ஒப்பிடும்போது தோரியத்தில் இருந்து 200 மடங்கு அதிக மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும். இவ்வாறு சர்வதேச அணு சக்தி விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.