சென்னை கடற்கரை – எழும்பூர் இடையே 4-வது பாதை: 17 விரைவு ரயில் சேவையில் மாற்றம்

சென்னை: சென்னை கடற்கரை – எழும்பூர் இடையே 4-வது பாதை அமைக்கும் பணி காரணமாக, 17 விரைவு ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட உள்ளது.

அதன் விவரம் வருமாறு: சென்னை எழும்பூர் – மதுரைக்கு மார்ச் 6, 7 ஆகிய தேதிகளில் மதியம் 1.45 மணிக்கு புறப்பட வேண்டிய விரைவு ரயில் (12635), எழும்பூர் – தாம்பரம் இடையே பகுதி ரத்து செய்யப்பட உள்ளது. இந்த ரயில் தாம்பரத்தில் இருந்து அதே நாட்களில் மதியம் 2.15 மணிக்கு புறப்படும்.

தாம்பரம் – ஐதராபாத்துக்கு மார்ச் 9-ம் தேதி மாலை 5.30 மணிக்கு புறப்பட வேண்டிய சார்மினார் அதிவிரைவு ரயில் (12759), தாம்பரம் – சென்னை கடற்கரை இடையே பகுதி ரத்து செய்யப்படவுள்ளது. இந்த ரயில், சென்னை கடற்கரையில் இருந்து அதேநாளில் மாலை 6.20 மணிக்கு புறப்படும். சென்னை எழும்பூர் – ராமேஸ்வரத்துக்கு மார்ச் 9-ம் தேதி மாலை 5.45 மணிக்கு புறப்பட வேண்டிய சேது அதிவிரைவு ரயில் (22661), எழும்பூர் – தாம்பரம் இடையே பகுதி ரத்து செய்யப்பட உள்ளது. இந்த ரயில் தாம்பரத்தில் இருந்து மாலை 6.15 மணிக்கு புறப்படும்.

சென்னை எழும்பூர் – புதுச்சேரிக்கு மார்ச் 9-ம் தேதி காலை 6.35 மணிக்கு புறப்பட வேண்டிய மெமு ரயில் (66051), எழும்பூர் – தாம்பரம் இடையே பகுதி ரத்து செய்யப்பட உள்ளது. இந்த ரயில் தாம்பரத்தில் இருந்து அதேநாளில் காலை 7.10 மணிக்கு புறப்படும். காரைக்குடி – சென்னை எழும்பூருக்கு மார்ச் 6, 7 ஆகிய தேதிகளில் அதிகாலை 5.40 மணிக்கு புறப்படும் பல்லவன் அதிவிரைவு ரயில் (12606), தாம்பரம் – சென்னை எழும்பூர் இடையே பகுதி ரத்து செய்யப்பட உள்ளது.

மன்னார்குடி – சென்னை எழும்பூருக்கு மார்ச் 8-ம் தேதி இரவு 10.35 மணிக்கு புறப்படும் விரைவு ரயில் (16180), தாம்பரம் – சென்னை எழும்பூர் இடையே பகுதி ரத்து செய்யப்பட உள்ளது.

திருநெல்வேலி – சென்னை எழும்பூருக்கு மார்ச் 8-ம் தேதி இரவு 8.40 மணிக்கு புறப்படும் அதிவிரைவு ரயில் (12632), செங்கல்பட்டு – சென்னை எழும்பூர் இடையே பகுதி ரத்து செய்யப்பட உள்ளது. புதுச்சேரி – சென்னை எழும்பூருக்கு மார்ச் 8-ம் தேதி மாலை 4 மணிக்கு புறப்படும் மெமு பாசஞ்சர் ரயில் (66052), தாம்பரம் – சென்னை எழும்பூர் இடையே பகுதி ரத்து செய்யப்பட உள்ளது.

நேரம் மாற்றம்: சென்னை எழும்பூர் – திருநெல்வேலிக்கு மார்ச் 6, 7 ஆகிய தேதிகளில் பிற்பகல் 2.45 மணிக்கு புறப்பட வேண்டிய வந்தே பாரத் ரயில் (20665), 15 நிமிடங்கள் தாமதமாக பிற்பகல் 3 மணிக்கு புறப்படும். மொத்தம் 17 விரைவு ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட உள்ளது. இந்தத் தகவல் தெற்கு ரயில்வே செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.