மொழிக் கொள்கை: பழனிவேல் தியாகராஜன் நேர்காணலை பகிர்ந்து முதல்வர் ஸ்டாலின் பாராட்டு

சென்னை: தேசியக் கல்விக் கொள்கையை தமிழக அரசு ஏற்க மறுப்பது தொடர்பாக, கரண் தாப்பருக்கு தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அளித்த வீடியோ பேட்டி வைரல் ஆகி வருகிறது.

அதில், “இருமொழிக் கொள்கை மூலம்தான் நாங்கள் தமிழகம் இந்த வளர்ச்சியை அடைந்துள்ளது. தமிழகத்துக்கு மும்மொழிக் கொள்கை தேவையில்லை. உத்தரப் பிரதேசம், பிஹார், குஜராத்தில் எத்தனை மாணவர்களுக்கு மூன்று மொழி தெரியும்? எத்தனை மாணவர்களுக்கு இரண்டு மொழி தெரியும்?

கடந்த 75 ஆண்டு கால இந்திய வரலாற்றில், மும்மொழிப் படிக்கும் மாநில மாணவர்கள், தமிழகத்தைவிட கல்வியில் சிறந்து விளங்குவதற்கான தரவுகள் ஏதேனும் உண்டா?” என்றெல்லாம் அடுக்கடுக்காக கேள்விகளை எழுப்பி விரிவாக பதில் கூறியிருந்தார் பழனிவேல் தியாகராஜன்.

இது தொடர்பான வீடியோ பதிவுகளை பகிர்ந்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்ட பதிவில், “நமது அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், நமது நிலைப்பாட்டை தெளிவாக விளக்கியுள்ளார்.

நாம் திறம்பட செயலாற்றி வரும்போது, சில ஏகாதிபத்திய மனங்களின் ஆறுதலுக்காக, ஏன் ஏதாவது ஒன்றைத் திணிக்க வேண்டும்? பாதிக்கப்பட்டவரைக் குறை கூறுவதில் இருக்கும் முரண்பாட்டையும், அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மிகக் கூர்மையாக அம்பலப்படுத்தியுள்ளார்” என பாராட்டு தெரிவித்துள்ளார்.

— M.K.Stalin (@mkstalin) March 4, 2025

மேலும், தொகுதி மறுசீரமைப்பின் தாக்கம் குறித்தும் அந்த வீடியோவில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விவரித்தார். நாட்டின் வளர்ச்சிக்காக மக்கள் தொகையை தமிழகம் கட்டுப்படுத்தியதைச் சுட்டிக்காட்டி பல்வேறு தரவுகளை அவர் முன்வைத்துப் பேசினார். இந்த விவகாரத்தில் முரண்பாடுகளை தெளிவாக எடுத்துரைத்ததாக அமைச்சரை முதல்வர் ஸ்டாலின் பாராட்டியுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.