குடும்ப வன்முறை: 2 மகள்களுடன் ரெயில்முன் பாய்ந்து பெண் தற்கொலை

திருவனந்தபுரம்,

கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் பரோலிகல் பகுதியை சேர்ந்தவர் ஷைனி (வயது 42). இவரது கணவர் லோபி லுகோஸ் (வயது 44). இந்த தம்பதிக்கு அலினா (வயது 11), இவானா (வயது 10) ஆகிய இரு மகள்கள் இருந்தனர்.

இதனிடையே, லோபி லுகோஸ் தனது மனைவி ஷைனியை அடிக்கடி அடித்து உடல் ரீதியாக துன்புறுத்தி குடும்ப வன்முறையில் ஈடுபட்டுள்ளார். மேலும், மகள்களையும் தாக்கியுள்ளார்.

பி.எஸ்.சி நர்சிங் பட்டதாரியான ஷைனி செவிலியராக பணியாற்ற விரும்பியுள்ளார். ஆனால், அதற்கு லோபி லுகோஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மேலும், உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பாதிக்கப்பட்ட ஷைனி கடந்த சில மாதங்களுக்குமுன் கணவர் லோபி மீது போலீசில் புகார் அளித்துள்ளார். அதேவேளை, விவகரத்துக்கோரியும் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்நிலையில், விவாகரத்துக்கோரி வழக்கு தொடர்ந்துள்ளபோதும் ஷைனியை லுகோஸ் தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதனால் மிகுந்த மன உளைச்சல் அடைந்த ஷைனி கடந்த 28ம் தேதி தனது மகள்களை அழைத்துக்கொண்டு எட்டுமுனூர் ரெயில்நிலையத்திற்கு சென்றுள்ளார். அங்கு வந்த ரெயில்முன் மகள்களுடன் ஷைனி பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார். ஷைனி மற்றும் அவரது 2 மகள்கள் என 3 பேரும் உயிரிழந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

மனைவி, மகள்களை தற்கொலைக்கு தூண்டியதாக லோபி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் அவர் தலைமறைவானார்.

கடந்த சில நாட்களாக தலைமறைவாக இருந்த லோபியை போலீசார் இன்று கைது செய்தனர். கைது செய்யப்பட்ட லோபியிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.