தீராத வயிற்று வலியால் அவதி… இளம்பெண் எடுத்த விபரீத முடிவு

பெங்களூரு,

கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டம் பங்காருபேட்டை டவுன் பாலமுருகன் சாலையில் வசித்து வந்தவர் ரமேஷ் பாபு. இவரது மகள் தேஜஸ்வினி (வயது 20). பி.யூ.சி. வரை படித்துள்ள இவர், டவுனில் உள்ள ரீசார்ஜ் கடையில் வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் தேஜஸ்வினி கடந்த சில மாதங்களாக தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார்.

இதற்காக பல ஆஸ்பத்திரிகளில் அவர் சிகிச்சை பெற்று வந்தார். ஆனாலும் அவருக்கு வயிற்று வலி மட்டும் குணமாகவில்லை. இதனால் தேஜஸ்வினி மனமுடைந்து காணப்பட்டார். நேற்றும் வயிற்று வலியால் அவர் அவதிப்பட்டார். இதனால் வேலைக்கு செல்லாமல் விடுமுறை எடுத்து வீட்டில் இருந்தார்.

அவரது பெற்றோர் வெளியே சென்றிருந்தனர். இதனால் தேஜஸ்வினி மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். அந்த சமயத்தில் அவர், திடீரென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதற்கிடையே வெளியே சென்றிருந்த அவரது பெற்றோர், வீட்டுக்கு திரும்பி வந்தனர். அப்போது தேஜஸ்வினி தூக்கில் பிணமாக கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்து கதறி அழுதனர்.

இதுபற்றி அக்கம்பக்கத்தினர் உடனடியாக பங்காருபேட்டை போலீசாருக்கு தகவல் அளித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் போலீசார் தற்கொலை செய்துகொண்ட தேஜஸ்வினியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த தேஜஸ்வினி, தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. இதுகுறித்து பங்காருபேட்டை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.