சென்னை: மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பு தொடா்பாக, தமிழக அரசு சாா்பில் அனைத்துக் கட்சிக் கூட்டம் இன்று காலை தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு 63 கட்சிகள் அழைக்கப்பட்ட நிலையில், 58 கட்சிகள் பங்கேற்றன.
தென்னிந்திய மாநில பிரதிநிதிகள் அடங்கிய “கூட்டு நடவடிக்கை குழு” அமைப்பதற்கான நடவடிக்கை விரைவில் மேற்கொள்ளப்படும் என்று அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தொகுதி மறுவரையறை தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின், பிற மாநில முதல்வர்களை நேரில் சந்தித்து ஒருமித்த கருத்தை உருவாக்க வேண்டும் என அனைத்துக்கட்சி கூட்டத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்துயுள்ளார். மேலும், தென்மாநில பிரதிநிதிகள் அடங்கிய கூட்டுக்குழுவை விசிக வரவேற்கிறது என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
58 கட்சிகள் பங்கேற்பு: முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அனைத்து கட்சி கூட்டத்தில் பாஜக, தமாகா தவிர திமுக, அதிமுக, பாஜக, காங்கிரஸ், பாமக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மதிமுக, விசிக, மனிதநேய மக்கள் கட்சி, அகில இந்திய பார்வர்டு பிளாக், தமிழக வாழ்வுரிமை கட்சி, மக்கள் நீதி மய்யம், தமிழக வெற்றிக் கழகம், ஆம் ஆத்மி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, ஆதித்தமிழர் பேரவை, முக்குலத்தோர் புலிப்படை, மூவேந்தர் முன்னேற்றக்கழகம் என மொத்தமாக 56 கட்சிகள் பங்கேற்றன.
மதிமுக சார்பில் வைகோ, காங்கிரஸ் சார்பில் செல்வப்பெருந்தகை, அதிமுக சார்பில் ஜெயக்குமார், பாமக சார்பில் அன்புமணி ராமதாஸ், விசிக சார்பில் திருமாவளவன், இடதுசாரிகள் சார்பில் முத்தரசன், பெ.சண்முகம், மநீம சார்பில் கமல்ஹாசன், தவெக சார்பில் புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு 63 கட்சிகள் அழைக்கப்பட்ட நிலையில், 58 கட்சிகள் பங்கேற்றன. பாஜக, புதிய தமிழகம், தமிழ் மாநில காங்கிரஸ் மற்றும் நாம் தமிழர், புதிய நீதிக்கட்சி ஆகிய கட்சிகள் அனைத்துக் கட்சி கூட்டத்தை புறக்கணித்தன.
முதல்வர் உரை: நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்பு அடுத்த 30 ஆண்டுகளுக்கு அமல்படுத்தப்படாது என பிரதமர் மோடி உறுதியளிக்க வேண்டும். நாடாளுமன்ற உறுப்பினர்கள் உயர்த்தப்பட்டாலும், தற்போது இருக்கிற பிரதிநிதித்துவ விகிதத்தில் மாற்றம் கூடாது. தொகுதி மறுசீரமைப்புக்கு தமிழ்நாடு எதிரானது அல்ல. அதேசமயம் தமிழ்நாட்டின் 50 ஆண்டுகளாக சமூக-பொருளாதார நலத்திட்டங்களுக்கு தொகுதி மறுசீரமைப்பு தண்டனையாகிவிடக் கூடாது.
கூட்டு நடவடிக்கைக் குழு அமைக்கப்பட்டு, அனைத்துக் கட்சிக் கூட்டத்தின் கோரிக்கைகள் மக்களிடையே விழுப்புணர்வாக பரப்பப்படும். தொகுதி மறுவரையறை நடவடிக்கையால் தமிழகத்தில் மொத்தமாக 8 மக்களவைத் தொகுதிகளை இழக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
இது தேசத்தின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றி உள்ள மாநிலங்களுக்கு கிடைத்துள்ள தண்டனையாக அமைந்துள்ளது. இது ஒட்டுமொத்த தென் மாநிலங்களுக்கும் ஏற்பட்டுள்ள அபாயம். அதனால் மக்கள்தொகை அடிப்படையிலான தொகுதி மறுவரையறையை எதிரிக்கும் நிலையில் உள்ளோம்.
இந்த விவகாரத்தில் கட்சி எல்லைகளை கடந்து அனைவரும் இணைய வேண்டும். தொகுதி மறுவரையறை நடவடிக்கையினால் தென் மாநிலங்களில் மக்களவை தொகுதிகளை குறைப்பது நம் குரலை நசுக்கும் முயற்சி. இது அரசியல் பிரதிநிதித்துவத்தின் மீதான நேரடி தாக்குதல். இந்த சதியை நாம் முறியடிக்க வேண்டும். தொகுதி மறுவரையறை என்ற கத்தி, தென்மாநிலங்களின் தலைக்கு மேல் உள்ளது” என பேசினார்.