மணிலா,
பிலிப்பைன்ஸ் நாட்டில் புகிண்ட்னான் மாகாணத்தில் அரசுக்கு எதிரான கிளர்ச்சிக்குழு செயல்பட்டு வருகிறது. இந்த கிளர்ச்சிக்குழுவை ஒடுக்க ராணுவம், விமானப்படை களமிறக்கப்படுள்ளன.
இந்நிலையில், கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான நடவடிக்கை மேற்கொள்ள நேற்று இரவு விமானப்படை போர் விமானங்கள் அப்பகுதியில் அதிரடி தாக்குதல் நடத்தினர். இதனை தொடர்ந்து போர் விமானங்கள் சிபு மாகாணத்தில் உள்ள படைத்தளத்திற்கு திரும்பின. அப்போது, இந்த ராணுவ நடவடிக்கையில் ஈடுபட்ட எப்.ஏ. 50 ரக போர் விமானம் படைத்தளத்திற்கு திரும்பவில்லை. மேலும், கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பையும் இழந்தது. அந்த போர் விமானத்தில் 2 வீரர்கள் பயணித்தனர்.
இதையடுத்து மாயமான போர் விமானத்தை தேடும் பணி தீவிரமாக நடைபெற்றது. இதில், போர் விமானம் புகிண்ட்னான் மாகாணத்தில் உள்ள மலைப்பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானது கண்டுபிடிக்கப்பட்டது. விமானத்தில் பயணித்த 2 வீரர்களும் உயிரிழந்தனர். உயிரிழந்த வீரர்களின் உடல்கள் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இந்த விபத்து குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். கிளர்ச்சியாளர்கள் போர் விமானத்தை சுட்டு வீழ்த்தினரா? என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.