லண்டன் மாநகரில் உள்ள அப்பல்லோ அரங்கில் வருகின்ற 08.03.2025 அன்று புதிய சிம்பொனி இசைக்கோர்வையை அரங்கேற்றம் செய்யவுள்ளார் இசையமைப்பாளர் இளையராஜா.
மேற்கத்திய இசை வடிவமான சிம்பொனியை வெறும் 34 நாட்களில் உருவாக்கி அரங்கேற்றுவதன் மூலம் தமிழர்களின் பெருமையை உலகெங்கும் பரவிடச் செய்யவிருக்கும் இளையராஜாவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், கமல்ஹாசன், தொல்.திருமாவளவன், சிவகார்த்திகேயன், பாஜக தலைவர்கள் உள்ளிட்ட பலரும் வாழ்த்துத் தெரிவித்திருந்தனர். இன்று காலை லண்டனுக்குச் செல்லும் இளையராஜாவை வாழ்த்தி வழிஅனுப்ப சென்னை விமான நிலையத்தில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய இளையராஜா, “சிம்பொனி இசை ரசிகர்களுக்கு பெரிய விருந்தாக இருக்கும். தமிழ்நாட்டில் இருந்து லண்டன் சென்று அப்பல்லோ அரங்கில் சிம்பொனியை அரங்கேற்றுகிறேன்.
நம் பெருமையைப் பறைசாற்ற லண்டன் செல்கிறேன். இது என்னுடைய பெருமையில்லை. நம் பெருமை. நம் தமிழ்நாட்டின் பெருமை. இந்தியாவின் பெருமை. நீங்களெல்லாம் சேர்ந்துதான் நான்.

‘incredible India’ போல நான் ‘incredible ilayaraja’. என்னைப்போல ஒருவர் இதுக்குமேல யாரும் வரப்போறதும் இல்ல, வந்ததும் இல்ல. நான் என் வேலையில் கவனமாக இருக்கிறேன். நீங்கள் உங்கள் வேலையில் கவனமாக இருக்க வேண்டும். இறைவனுடைய அருள் நம் எல்லோருக்கும் பரிபூரணமாக இருக்க வாழ்த்துகள்” என்று பூரிப்புடன் பேசிவிட்டு லண்டன் புறப்பட்டார் இளையராஜா.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்… CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
