பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ உடன் தொடர்பு வைத்திருந்த பப்பர் கல்சா சர்வதேச தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர் உ.பி.யில் நேற்று கைது செய்யப்பட்டார்.
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் நகரை அடுத்த குர்லியான் கிராமத்தைச் சேர்ந்தவர் லஜர் மசி. ஜெர்மனியின் பப்பர் கல்சா இன்டர்நேஷனல் (காலிஸ்தான் தீவிரவாத அமைப்பு) தலைவர் ஸ்வர்ன் சிங் (எ) ஜீவன் பாவ்ஜியுடன் இணைந்து செயல்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ அமைப்புடன் லஜர் நேரடி தொடர்பு வைத்திருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, அவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நீதிமன்ற காவலில் இருந்து தப்பிச் சென்ற அவரை பஞ்சாப் போலீஸார் தேடி வந்தனர்.
இந்நிலையில், லஜர் உத்தர பிரதேசத்தின் கவுஷாம்பி மாவட்டத்தில் இருப்பதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, பஞ்சாப் போலீஸாரும் உத்தரபிரதேச சிறப்புப் படை (எஸ்டிஎப்) போலீஸாரும் இணைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதில் நேற்று அதிகாலை 3.20 மணியளவில் லஜர் மசியை கைது செய்தனர். அவரிடமிருந்து வெடிபொருட்கள் மற்றும் சட்டவிரோத ஆயுதங்களை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.
மகா கும்பமேளாவில் சதி: இதனிடையே, மகா கும்பமேளாவின்போது தாக்குதலில் ஈடுபட லஜர் மசி சதித் திட்டம் தீட்டியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அவரை உ.பி. போலீஸார் தேடி வந்தனர். ஆனால் பாதுகாப்பு கெடுபிடி காரணமாக அவரால் தனது திட்டத்தை செயல்படுத்த முடியவில்லை என உ.பி. காவல் துறை தலைவர் பிரசாந்த் குமார் தெரிவித்தள்ளார்.