புதுடெல்லி: அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் உள்ள ஒரு இந்து கோயிலில் நடந்த நாசவேலைக்கு இந்தியா தனது கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துள்ளது. மேலும் இதற்கு காரணமானவர்களுக்கு எதிராக சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.
இத்தகைய செயல்கள் மிகவும் வெறுக்கத்தக்கவை என்று தெரிவித்துள்ள இந்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரன்தீர் ஜெய்ஸ்வால், உள்ளூர் நிர்வாகத்தினர் வழிபாட்டுத்தளங்களுக்கு உரிய பாதுகாப்பினை உறுதி செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்சிலுள்ள சினோ ஹில்ஸில் இருக்கும் இந்து கோயில் ஒன்று சேதப்படுத்தப்பட்டது குறித்த கேள்விக்கு பதில் அளித்து ரன்தீர் ஜெய்ஸ்வால் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கலிபோர்னியாவின் சினோ ஹில்ஸில் உள்ள இந்து கோயில் சேதப்படுத்தப்பட்டது குறித்த செய்திகளை நாங்களும் பார்த்தோம். இந்த இழிவான செயல்களை வன்மையாக கண்டிக்கிறோம்.
இந்த செயலில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கவும், வழிபாட்டுத் தலங்களுக்கு உரிய பாதுகாப்பினை உறுதி செய்ய வேண்டும் என்றும் உள்ளூர் சட்ட அதிகாரிகளைக் கேட்டுக்கொள்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.
கோயில் மீதான தாக்குதல் குறித்து பிஏபிஎஸ் அல்லது போச்சசன்வாசி அக்ஷர் புருஷோத்தம் சுவாமிநாராயன் சன்ஸ்தா அதன் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “இந்தமுறை கலிஃபோர்னியாவின் சினோ ஹில்ஸில் உள்ள ஒரு இந்து கோயில் அவமதிப்புக்கு உள்ளாகி இருக்கிறது. இந்து சமூகம் வெறுப்புக்கு எதிராக ஒற்றுமையுடன் நிற்கிறது.
சினோ ஹில்ஸ் மற்றும் தெற்கு கலிபோர்னியா சமூக மக்களுடன் ஒன்றிணைந்து நிற்போம்; வெறுப்பை வேரூன்ற அனுமதிக்க மாட்டோம். நமது பொதுவான மனிதநேயம் மற்றும் நம்பிக்கை அமைதி மற்றும் இரக்கம் நிலவுவதை உறுதிசெய்யும்” என்று தெரிவித்துள்ளது.
கலிபோர்னியாவின் சாக்ரமெண்டோவில் உள்ள ஒரு இந்து கோயில் சேதப்படுத்தப்பட்ட நிலையில் தற்போது இந்த விவகாரம் நடந்துள்ளது. கடந்த செப்டம்பரில், கோயில் வளாகத்தில் அவதூறு வார்த்தைகள் எழுதிப்போடப்பட்டிருந்தன. இந்த சாக்ரமெண்டோ கோயில் நிகழ்வுக்கு முன்பாக நியூயார்க்கின் மெல்வில்லேவில் உள்ள ஒரு இந்து கோயில் சேதப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.