புதுடெல்லி: குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் தன்கரின் உடல்நலன் குறித்து மருத்துவமனைக்கு நேரில் சென்று விசாரித்த பிரதமர் மோடி, அவர் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகத் தெரிவித்துள்ளார்.
குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர் நெஞ்சு வலி மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 2 மணியளவில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 73 வயதான தன்கர், இதயவியல் துறைத் தலைவர் ராஜீவ் நராங்க் கண்காணிப்பில் தீவிர சிகிச்சை பிரிவில் (சிசியு) அனுதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு வெற்றிகரமாக ஸ்டென்ட் பொருத்தப்பட்டதாகவும், அவர் மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் இருப்பதாகவும், உடல்நிலை சீராக இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
குடியரசு துணைத் தலைவரின் உடல்நிலை குறித்து அறிந்து கொள்வதற்காக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜெ.பி.நட்டா, எய்ம்ஸ் மருத்துவமனைக்குச் சென்று நேரில் விசாரித்தார்.
இதனைத் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடியும், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நேரில் சென்று குடியரசு துணைத் தலைவரின் உடல்நிலை குறித்து விசாரித்தார்.
இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில், “எய்ம்ஸ் மருத்துவமனைக்குச் சென்று குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் தன்கரின் உடல்நிலை குறித்து விசாரித்தேன். அவர் நல்ல உடல்நலத்தைப் பெறவும், விரைவில் குணமடையவும் பிரார்த்திக்கிறேன்” என்று பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.