அன்றாடம் ரூ.100-150-க்கு கஷ்டப்பட்டு வந்த உத்தர பிரதேசம் சுல்தான்பூரைச் சேர்ந்த ராம்சேத் என்ற செருப்பு தைக்கும் தொழிலாளி தற்போது சொந்த பிராண்டை உருவாக்கும் அளவுக்கு தொழிலதிபராக மாறியுள்ளார். இவரது வாழ்க்கைப் பயணம் மாறியதற்கு மக்களவை எதிர்க்கட்சி தலைவரும், ரேபரேலி தொகுதியின் எம்.பி.யுமான ராகுல் காந்தி உரியநேரத்தில் செய்த உதவிதான் காரணம். ராம்சேத் தனது சொந்த திறமையால் வடிவமைத்து காலணிகளை உருவாக்கும் வகையில் செருப்பு தைக்கும் இயந்திரத்தையும், மூலப்பொருட்களையும் ராகுல் காந்தி பரிசளித்தார்.
கடந்த பிப்ரவரியில் அழைப்பின்பேரில் டெல்லி ஜன்பத் சாலையில் உள்ள ராகுல் காந்தி வீட்டுக்கு சென்ற ராம்சேத், சோனியா காந்தி மற்றும் பிரியங்கா காந்தி வதேராவை சந்தித்து தனது கையால் செய்யப்பட்ட காலணியை அவர்களுக்கு பரிசளித்தார்.
அண்மையில் ராகுல், ராம்சேத்தை மும்பைக்கு கூட்டிச் சென்று சுதீர் ராஜ்பர் என்ற தொழிலதிபரையும் அவருக்கு அறிமுகம் செய்து வைத்தார். சார்மர் ஸ்டூடியோ என்ற பிராண்டின் நிறுவனரான அவர் ராம்சேத்துக்கு தொழில்நுட்பங்களையும், வர்த்தக சூட்சுமங்களையும் சொல்லிக்கொடுத்தார். இது, அவரது வாழ்க்கை பாதையையே மாற்றியமைத்துள்ளது.
“ராம்சேத் மோச்சி” என்ற புதிய பிராண்டை அறிமுகம் செய்யும் பணியில் ராம்சேத் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். இதற்கு, ராகுல் காந்தியின் தொடர் உதவிதான் காரணம் என்பதை அவர் நெகிழ்சியுடன் நினைவுகூர்ந்துள்ளார்.
ராம்சேத் உடன் சந்தித்த படத்தை எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ள ராகுல் காந்தி அவருக்கு வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துள்ளார்