நெஞ்சுவலி காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் குடியரசுத் துணை தலைவர் ஜெகதீப் தன்கர் நேற்று அனுமதிக்கப்பட்டார். அங்கு சென்ற பிரதமர் மோடி அவரது உடல் நலம் குறித்து மருத்துவர்களிடம் விசாரித்தார்.
குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீ்ப் தன்கருக்கு நேற்று அதிகாலை 2 மணியளவில் நெஞ்சு வலியும், அசவுகரியமும் ஏற்பட்டது. இதையடுத்து அவர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு இதய சிகிச்சை நிபுணர் ராஜீவ் நாராங் சிகிச்சை அளித்தார். அவர் தற்போது நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில் பிரதமர் மோடி நேற்று டெல்லி எய்ம்ஸ் மருத்துமனைக்கு சென்று, ஜெகதீப் தன்கரின் நலம் குறித்து மருத்துவர்களிடம் விசாரித்தார். இது குறித்து எக்ஸ் தளத்தில் தகவல் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, ‘‘ எய்ம்ஸ் மருத்துவமனை சென்று குடியரசு துணைத் தலைவரின் நலம் குறித்து கேட்டறிந்தேன். அவர் விரைவில் குணமடைந்து நல்ல ஆரோக்கியத்துடன் இருக்க பிரார்த்திக்கிறேன்’’ என குறிப்பிட்டுள்ளார்.
மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டாவும் எய்ம்ஸ் மருத்துவமனை சென்று ஜெகதீப் தன்கரின் நலம் குறித்து விசாரித்தார்.