நாடாளுமன்ற கூட்டத் தொடர் இன்று தொடக்கம்: வக்பு மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசு திட்டம்

புதுடெல்லி: ​நா​டாளு​மன்ற பட்​ஜெட் கூட்​டத் தொடரின் 2-ம் கட்ட அமர்வு இன்று தொடங்​கு​கிறது. வக்பு வாரிய திருத்​தம் உள்​ளிட்ட மசோ​தாக்​களை நிறைவேற்ற மத்​திய அரசு தீவிரம் காட்டி வரு​கிறது. மும்​மொழி கொள்​கை, மக்​களவை தொகுதி மறு​வரையறை, மணிப்​பூர் கலவரம் உட்பட பல்​வேறு விவ​காரங்​களை எழுப்ப எதிர்க்​கட்​சிகள் திட்​ட​மிட்​டுள்​ளன.

நாடாளு​மன்ற பட்​ஜெட் கூட்​டத் தொடரின் முதல் அமர்வு கடந்த ஜனவரி 31-ம் தேதி தொடங்கி பிப்​ர​வரி 13-ம் தேதி வரை நடை​பெற்​றது. முதல் நாளில் நாடாளு​மன்ற கூட்​டுக் கூட்​டத்​தில் குடியரசுத் தலை​வர் திர​வுபதி முர்மு உரை​யாற்​றி​னார். பிப்​ர​வரி 1-ம் தேதி மத்​திய பட்​ஜெட்டை நிதி அமைச்​சர் நிர்​மலா சீதா​ராமன் தாக்​கல் செய்​தார்.

குடியரசுத் தலை​வர் உரைக்கு நன்றி தெரிவிக்​கும் தீர்​மானம் மீதான விவாதத்​தில், ஆளும் தேசிய ஜனநாயக கூட்​டணி – எதிர்க்கட்சி எம்​.பி.க்​கள் இடையே கடும் வாக்​கு​வாதம் நடந்​தது. வக்பு வாரிய திருத்த மசோதா தொடர்​பாக​வும் நாடாளு​மன்​றத்​தில் கடும் அமளி நில​வியது.

இந்த சூழலில். பட்​ஜெட் கூட்​டத் தொடரின் 2-ம் கட்ட அமர்வு இன்று தொடங்​கு​கிறது. இந்த தொடரில் வக்பு வாரிய திருத்த மசோ​தாவை நிறைவேற்ற மத்​திய அரசு தீவிரம் காட்டி வரு​கிறது. இந்த மசோ​தாவுக்கு காங்​கிரஸ் உள்​ளிட்ட எதிர்க்​கட்​சிகள் ஆரம்​பம் முதலே கடும் எதிர்ப்பு தெரி​வித்து வரு​கின்​றன.

இந்த கூட்​டத் தொடரின்​போது, குடியேற்​றம் – வெளி​நாட்​டினர் சட்ட மசோ​தா, வங்கி திருத்த மசோதா, ரயில்வே திருத்த மசோ​தா, கடலோர கப்​பல் போக்​கு​வரத்து மசோதா ஆகிய​வற்றை நிறைவேற்​ற​வும் மத்​திய அரசு தீவிர முயற்சி மேற்​கொள்​ளும் என்று தெரிகிறது. இதற்​கிடையே, மும்​மொழி கொள்​கை, மக்​களவை தொகுதி மறு​வரையறை ஆகிய​வற்​றுக்கு தமிழக அரசும், பல்​வேறு கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரி​வித்து வரு​கின்​றன. இது நாடாளு​மன்ற கூட்டத் தொடரில் எதிரொலிக்​கும் என்று தெரி​கிறது. மணிப்​பூரில் மீண்​டும் கலவரம் ஏற்​பட்ட நிலை​யில், இதுபற்றி நாடாளு​மன்​றத்​தில் காங்​கிரஸ் போர்க்​கொடி உயர்த்​தும் என்று கூறப்படுகிறது.

வெவ்​வேறு மாநிலங்​களில் வாக்​காளர்​களுக்கு ஒரே வாக்​காளர் அடை​யாள அட்டை எண் வழங்​கப்​பட்ட விவ​காரத்தை திரிண​மூல் காங்​கிரஸ் கட்சி தீவிர​மாக எழுப்பி வரு​கிறது. இந்த விவ​காரத்தை நாடாளு​மன்​றத்​தின் இரு அவை​களி​லும் எழுப்​புவோம் என்று அக்​கட்​சி​யின் மூத்த தலை​வர் டெரிக் ஓ பிரையன் தெரி​வித்​துள்​ளார்.

இந்​தியா உள்ளிட்ட நாடு​கள் மீது வரும் ஏப்​ரல் 2-ம் தேதி முதல் பரஸ்பர வரி விதிக்​கப்​படும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறி​வித்​துள்​ளார். தனது அழுத்​தம் காரண​மாக அமெரிக்க பொருட்​கள் மீதான வரியை குறைக்க இந்​திய அரசு முன்​வந்​திருக்​கிறது என்​றும் அவர் கூறி​யுள்​ளார். அமெரிக்க அரசின் வரி விதிப்பு விவ​காரம் குறித்து காங்​கிரஸ் உள்​ளிட்ட எதிர்க்​கட்​சிகள் நாடாளு​மன்​றத்​தில் பிரச்​சினையை எழுப்ப திட்​ட​மிட்​டுள்​ளன. அமெரிக்​கா​வில் இருந்து வெளி​யேற்​றப்​படும் இந்​தி​யர்​கள், கைவிலங்​கிட்டு அழைத்து வரப்​பட்​டது குறித்​தும் எதிர்க்​கட்​சிகள் குரல் எழுப்​பும் என்று தெரி​கிறது.

மத்​திய பட்​ஜெட்​டில் போதிய நிதி ஒதுக்​கப்​பட​வில்லை என்று தமிழகம், தெலங்​கானா உள்​ளிட்ட மாநிலங்​கள் குற்​றம்​சாட்டி வரு​கின்​றன. இதுகுறித்​தும் எதிர்க்​கட்​சிகள் பிரச்​சினை எழுப்ப திட்​ட​மிட்​டுள்​ளன. இன்று தொடங்​கும் 2-ம் கட்ட கூட்​டத் தொடர் ஏப்​ரல் 4-ம் தேதி வரை நடை​பெற உள்​ளது. இந்த தொடரை சுமுக​மாக நடத்த மத்​திய அரசு தீவிர முயற்சி மேற்​கொண்டு வரும் நிலை​யில், பல்​வேறு பிரச்​சினை​களை எழுப்​ப எதிர்க்​கட்​சிகள் தயா​ராகி வரு​கின்​றன.

மணிப்​பூர் மாநிலத்​தில் கடந்த பிப்​ர​வரி 13-ம் தேதி குடியரசுத் தலை​வர் ஆட்சி அமல்​படுத்​தப்​பட்​டது. இதற்கு நாடாளு​மன்​றத்​தில் ஒப்​புதல் கோரி, மத்​திய உள்​துறை அமைச்​சர் அமித் ஷா தீர்​மானம் கொண்டு வரு​வார். மணிப்​பூருக்​கான பட்​ஜெட்டை மக்​களவை​யில் மத்​திய நிதி அமைச்​சர் நிர்​மலா சீதா​ராமன்​ தாக்​கல்​ செய்​வார்​ என்​று மத்​தி​ய அரசு வட்​டாரங்​கள்​ தெரிவித்​துள்​ளன.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.