மழைக்கு மரத்தடியில் ஒதுங்கியவர்கள் மீது மின்னல் தாக்கி இருவர் உயிரிழப்பு; உளுந்தூர்பேட்டையில் சோகம்!

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இடி, மின்னலுடன் பெய்து வருகிறது.

இந்நிலையில், உளுந்தூர்பேட்டை அருகே உள்ள களமருதூர் கிராமத்தைச் சேர்ந்த ராமர் (72) மற்றும் அவரது பேரன் சூர்யா (26), பாலி கிராமத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற தலைமைக் காவலர் காசிலிங்கம் ஆகிய மூவரும் மழையில் நனையாமல் இருக்க புளியமரத்தடியில் நின்றிருந்தனர். திடீரென அந்த மரத்தின் மீது மின்னல் விழுந்ததில், இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஒருவருக்குக் கடுமையான காயங்கள் ஏற்பட்டன.

இடி, மின்னல்

இதில், ராமர் மற்றும் ஓய்வு பெற்ற காவலர் காசிலிங்கம் உயிரிழந்ததாகத் தெரியவந்துள்ளது. அவர்களுடன் இருந்த சூர்யா படுகாயமடைந்து, உடனடியாக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சையில் உள்ளார்.

தகவல் கிடைத்ததும், உளுந்தூர்பேட்டை போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். உயிரிழந்தவர்களின் உடல்களைக் கைப்பற்றி, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மக்களை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியிருக்கும் இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, மழையின்போது திறந்த வெளியில் செல்லாமல் பாதுகாப்பாக இருப்பது குறித்து அதிகாரிகள் மக்களுக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.