நடந்து முடிந்த 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்றது. முதலில் பாகிஸ்தானில்தான் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் இந்திய அணி பாகிஸ்தான் சென்று விளையாட மறுத்ததால், இந்திய அணி ஆடும் போட்டிகள் மட்டும் துபாயில் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி இந்திய அணி தொடர் முழுவதும் ஒரே மைதானத்தில் துபாயில் விளையாடியது. இதனால் இந்திய அணி ஒரே மைதானத்தில் விளையாடியதால் தான் சாம்பியன்ஸ் டிராபி கோப்பையை கைப்பற்றியது என்ற விமர்சனம் உள்ளது. இந்நிலையில்தான் அது குறித்து பாகிஸ்தான் முன்னாள் வீரர் ஷாஹித் அஃப்ரிடி பேசி இருக்கிறார்.
அவர் பேசியதாவது, இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபியை வெல்ல தகுதியானவர்கள். உங்கள் உள்நாட்டு கிரிக்கெட், கட்டமைப்பு, அகாடமிகள் மற்றும் நல்ல முதலீடுகள் செய்யும்போது அதற்கான பலன்களை நீங்கள் பெறுவீர்கள். சந்தேகத்திற்கு இடமின்றி, இந்திய அணியின் தேர்வுக்குழு வீரர்களை மைதானத்திற்கு ஏற்ப தேர்வு செய்திருந்தனர். ஒரே மைதானத்தில் விளையாடியதால், அவர்களுக்கு பிட்ச்சின் கண்டிஷன் குறித்து தெரிந்திருக்கும். ஒரே மைதானத்தில் விளையாடியது கோப்பையை வெல்ல காரணமாக இருந்தாலும், அணி தேர்வு என்பது முக்கியம்.
மேலும் படிங்க: ரோகித்துடன் இறங்கப்போகும் வீரர் இவர்தான்.. அப்போ இம்பேக்ட் வீரர் யார்? மும்பை இந்தியன்ஸ் பிளேயிங் 11 இதோ!
இதை நான் ஏன் கூறுகிறேன் என்றால், நாங்கள் துபாயில் விளையாடி உள்ளோம். நாங்கள் சுழற்பந்து வீச்சாளர்களை அதிரடியாக கையாள்வோம். துபாயில் சுழற்பந்து வீச்சாளர்களின் பங்கு மிகவும் முக்கியமானது. அந்த வகையில் அவர்களது தேர்வு சிறப்பாக இருந்தது.
இந்திய அணியில் தொடக்க வீரர்கள் முதல் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள், ஆல் ரவுண்டர்கள், சுழற்பந்து வீச்சாளர்கள் மற்றும் வேகப்பந்து வீச்சாளர்கள் வரை பார்த்தால், உலகின் மிகச்சிறந்த 11 பேர் கொண்ட அணியை இறக்கினாலும் இந்திய அணியே வெல்லும் என கூறுவேன் என்றார்.
மேலும் படிங்க: இது நடந்தால்.. பும்ராவின் கிரிக்கெட் கரியர் முடிந்துவிடும் – நியூசி வீரர் ஷேன் பாண்ட்!