`தமிழ்நாடு பிச்சைக்கார மாநிலமா… உயிரே போனாலும் அடிபணிய மாட்டோம்!' – ஸ்டாலின் காட்டம்

மத்திய அரசு, தமிழ்நாட்டில் அமலுக்குக் கொண்டுவரத் தீவிரம் காட்டி வரும் ‘தேசியக் கல்விக் கொள்கை’, ‘தொகுதி மறுவரையறை’ திட்டங்களுக்குக் கடும் எதிர்ப்புகள் கிளம்பி வருகின்றன.

மத்திய அரசின் தேசியக் கல்விக் கொள்கையையும், அதில் இருக்கும் மும்மொழிக் கொள்கை பெயரிலான இந்தித் திணிப்பையும் எதிர்த்து தற்போது நடைபெறும் நாடாளுமன்ற மத்திய பட்ஜெட் கூட்டத்தொடரில் எதிர்க்கட்சி எம்.பி-க்கள் கடும் விவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழ்நாட்டின் கல்விக்கு வழங்க வேண்டிய ரூ. 2,000 கோடி நிதியை வழங்காமல், மத்திய கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதானின் ‘தேசியக் கல்விக் கொள்கையை ஏற்றால்தான் நிதி வழங்கும்’ என்ற பேச்சை கண்டித்து நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பினர். அதற்கு தர்மேந்திர பிரதான் , தமிழ்நாட்டு எம்.பி-க்களை அவமதிக்கும் வகையில் ‘அநாகரிகமாவர்கள்’ என்று பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இதைக் கண்டித்தும், மத்திய அரசின் ‘தேசியக் கல்விக் கொள்கை’, ‘தொகுதி மறுவரையறை திட்டங்களைக் கண்டித்தும் ‘தி.மு.க’ தீவிரமான ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகிறது.

‘தமிழ்நாடு போராடும்! தமிழ்நாடு வெல்லும்!’ எனும் தலைப்பில் மாநிலம் முழுவதும் கண்டன பொதுக்கூட்டங்கள் நடத்தப்படும் என ‘தி.மு.க’ அறிவித்திருக்கிறது.

‘தமிழ்நாடு போராடும்! தமிழ்நாடு வெல்லும்!’ பொதுக்கூட்டம்

இந்நிலையில் இன்று திருவள்ளூர், திருப்பாச்சூரில் நடைபெற்ற கண்டன பொதுக்கூட்டத்தில் தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு ‘தமிழ்நாடு என்ன பிச்சைக்கார மாநிலமா?’ என்று மத்திய அரசைக் கடுமையாகக் கண்டித்துப் பேசியிருக்கிறார். இதுகுறித்துப் பேசியிருக்கும் ஸ்டாலின், ” ‘தேசியக் கல்விக் கொள்கையை, மும்மொழிக் கொள்கையை ஏற்றுக் கொண்டால்தால் தமிழ்நாட்டிற்கு ரூ.2000 கோடி நிதியைத் தருவேன்’ என்றார்கள். ரூ.2000 கோடி அல்ல, ரூ.10,000 கோடி கொடுத்தாலும் தேசியக் கல்விக் கொள்கையை, மும்மொழிக் கொள்கையை ஏற்கமாட்டோம் என்று உறுதியாகக் கூறிவிட்டேன். அதனால்தான் தமிழ்நாட்டிற்குத் தர வேண்டிய நிதியைத் தர மறுக்கிறார்கள். பழிவாங்கும் செயல்களில் ஈடுபடுகிறார்கள்.

தேசியக் கல்விக் கொள்கை மக்களுக்கு நன்மை தரும் எனில் நாங்கள் அதை ஏற்றுக் கொண்டிருப்போம். ஆனால், அது கல்விக் கொள்கை அல்ல காவிக் கொள்கை. இந்தியாவை வளர்க்கக் கொண்டுவரப்பட்டது அல்ல, இந்தியை வளர்க்கக் கொண்டுவரப்பட்டது. இட ஒதுக்கீட்டை தேசியக் கல்விக் கொள்கை ஏற்கவில்லை. 3, 5-ம் வகுப்புகளுக்குப் பொதுத்தேர்வு, 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை செமஸ்டர் தேர்வு முறை கொண்டுவருகிறார்கள். நீட் போல எல்லா கல்லூரி படிப்புகளுக்கும் நுழைவுத் தேர்வுமுறை வரப்போகிறது.

6ம் வகுப்பு முதல் தொழில் கல்வி என்ற பெயரில் ‘குலக் கல்வி முறை’யை கொண்டு வரத் திட்டமிட்டிருக்கிறார்கள். படித்து முன்னேற வேண்டும் என்றும் நினைப்பவர்களை மீண்டும் தொழில் கல்வி என்ற பெயரில் ‘குலக் கல்வி முறை’க்குள் தள்ளப் பார்க்கிறார்கள். இப்படி மாணவர்களை மட்டுப்படுத்தி, தமிழ்நாட்டுக் கல்வியை சீர்குலைத்து அழித்து, ஒழிக்கும் இந்த தேசியக் கல்விக் கொள்கையை எதிர்க்கிறோம்.

ஸ்டாலின்

‘நீங்கள் செய்வதெல்லாம் நாகரிகமான செயலா? எங்களிடமிருந்தே வரி வாங்கிக் கொண்டு, அதை எங்களுக்கே தர மறுத்து சிறுமைப்படுத்துகிறீர்களே… அதுதான் அநாகரிகம். தமிழ் பிடிக்கும் என்றும் பேசிக்கொண்டே தமிழுக்கு நிதி ஒதுக்காமல், சமஸ்கிருதத்திற்கு நிதி ஒதுக்குகிறீர்களே அதுதான் நாகரிகமா? தாய் மொழிகளை மதிக்கிறோம் என்று கூறிவிட்டு இந்தியையும், சமஸ்கிருதத்தையும் திணிப்பதுதான் நாகரிகமா? குஜராத்தில் பேரிடர் வந்தால் உடனே பேரிடர் நிதி ஒதுக்குவது, தமிழ்நாட்டில் பேரிடர் வந்தால் இரண்டு வருடமானாலும் பேரிடர் நிதி ஒதுக்குவதில்லை. ஒரே ஒரு எய்ம்ஸ் மருத்துவமனையை அறிவித்துவிட்டு ஏழு வருடங்களாக அதைக் கட்டாமல் ஏமாத்துகின்றீர்களே… இவையெல்லாம் நாகரிகமா? அநாகரித்தின் அடையாளமே நீங்கள்தான்.

தமிழ்நாட்டு எம்.பி-க்கள் கேள்வி கேட்கிறார்கள். அவர்களின் போர்குணத்தை அவர்களால் தாங்க முடியவில்லை. அதனால், தமிழ்நாட்டு எம்.பி-க்களை குறைக்க, ‘தொகுதி மறுவரையறை’ கொண்டு வரத் துடிக்கிறார்கள்.

ஸ்டாலின்

சமூக நீதி, மதச்சார்பின்மை, கூட்டாச்சி இந்தியா, மாநில சுயாட்சி கோட்பாடுகளுக்கு எதிராக தத்துவங்களை வைத்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இதை எதிர்க்க பல கட்சிகளை அணிதிரட்டி ஒன்றிணைந்து போராடவிருக்கிறோம். மார்ச் 22ம் தேதி 7 மாநில பிரதிநிதிகள் கூட்டம் நடைபெறவிருக்கிறது. அப்படி அணி திரட்டினால்தான் இந்தியாவைக் காப்பாற்ற முடியும். ‘தமிழ்நாடு போராடும்! தமிழ்நாடு வெல்லும்!’ இந்தியா முழுமைக்குமான போராட்டமாக மாறப்போகிறது. உயிரே போனாலும் ‘பா.ஜ.க’வின் பாசிசத்திற்கு அடிபணிய மாட்டோம். பிரதமர் மோடி அவர்களே இந்தியை வளர்ப்பதை விட்டுவிட்டு, இந்தியாவை வளர்க்கப் பாருங்கள்.” என்று பேசியிருக்கிறார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.