பெங்களூரு: தங்கக் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகை ரன்யா ராவ் தன்னை விசாரணை என்ற பெயரில் தூங்கவிடாமல் துன்புறுத்தியதாகவும், அவதூறாகப் பேசியதாகவும், மிரட்டியதாகவும் நீதிமன்றத்தில் கண்ணீர் விட்டு கதறியுள்ளார்.
கர்நாடக போலீஸ் டிஜிபி ராமசந்திர ராவின் வளர்ப்பு மகளும், நடிகையுமான ரன்யா ராவ் (32) துபாயில் இருந்து 14.8 கிலோ தங்கம் கடத்தி வந்ததாக கடந்த 3-ம் தேதி பெங்களூரு விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் அவரது வீட்டில் நடத்திய சோதனையில் ரூ.2.67 கோடி ரொக்கப்பணமும், ரூ.2.06 கோடி மதிப்பிலான தங்க நகைகளும் சிக்கின. இதையடுத்து அதிகாரிகள் அவரை மார்ச் 24-ம் தேதி வரை காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், விசாரணையின் போது தன்னை தூங்கவிடாமல் துன்புறுத்தியதாகவும், அவதூறான வார்த்தைகளை பிரயோகித்ததாகவும், மிரட்டியதாகவும் ரன்யா தெரிவித்துள்ளார். பொருளாதார குற்றங்களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு விசாரணையின்போது ரன்யா இவ்வாறாக தெரிவித்துள்ளார்.
முன்னதாக, ரன்யா ராவின் சில புகைப்படங்கள் இணையத்தில் பரவின. அதில் அவர் வீங்கிய கண்கள், காயம்பட்ட முகத்துடன் இருப்பது தெரிந்தது. இந்நிலையில்தான் ரன்யா நீதிமன்றத்தில் ‘நான் உடைந்து போயுள்ளேன்’ என்று கூறி கதறி அழுததாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.
முன்னதாக நேற்று, ரன்யா ராவிடம் இருந்து தங்கத்தை வாங்கியதாக பெங்களூருவை சேர்ந்த நட்சத்திர விடுதி உரிமையாளரும் தொழிலதிபருமான தருண் கே ராஜை கைது செய்தனர். அதேபோல், தங்கக் கடத்தல் வழக்கில் ரன்யா ராவுக்கு அவரது வளர்ப்பு தந்தையும் போலீஸ் டிஜிபியுமான ராமசந்திர ராவ் உதவியதாக தகவல் வெளியானது. இதனால் கர்நாடக அரசு அவரை விசாரிக்குமாறு கர்நாடக சிஐடி (குற்றப்பிரிவு புலனாய்வு துறை) போலீஸாருக்கு உத்தரவிட்டது.
இந்த வழக்கில் நாளுக்கு நாள் புதுப்புது திருப்பங்கள் ஏற்பட்டு வருகிறது. பல முக்கியப் பிரமுகர்கள் தொடர்புகள் குறித்த விசாரணை நீள்கிறது. அந்தவகையில் பாஜக முக்கியத் தலைவர் அமித் மாள்வியா இன்று தனது எக்ஸ் சமூக வலைதளத்தில், முதல்வர் சித்தராமய்யாவுடன் ரன்யா எடுத்த புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். கூடவே, “இந்த வழக்கு இப்போது காங்கிரஸ் தலைவரின் வாயிலை வந்தடைந்துள்ளது.” என்று கிண்டல் தொனியில் குறிப்பிட்டுள்ளார்.