தேர்தல் நடைமுறைகளை வலுப்படுத்த யோசனைகளை தெரிவிக்கலாம் என்று அரசியல் கட்சிகளுக்கு தலைமைத் தேர்தல் ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது.
மேற்கு வங்க மாநிலம் கூச் பெஹார் பகுதியில் உள்ள ஒருவரின் வாக்காளர் அடையாள அட்டை எண்ணும், உத்தரபிரதேச மாநிலம் திதர்கஞ்ச் பகுதியில் உள்ள ஒருவரின் வாக்காளர் அடையாள அட்டை எண்ணும் ஒன்றாக உள்ளது என்று திரிணமூல் காங்கிரஸ் கட்சி தலைவர்கள் அண்மையில் குற்றம் சாட்டி இருந்தனர். இதன்மூலம் போலி வாக்காளர்கள் மற்றும் வெளிமாநிலத்தை சேர்ந்த வாக்காளர்கள் மேற்கு வங்கத்தில் உள்ளதாக அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம் சாட்டி இருந்தார்.
ஆனால் இதை மறுத்த தலைமைத் தேர்தல் ஆணையம், மாநிலங்களின் வாக்காளர் பட்டியல் தகவல்கள், தேர்தல் ஆணையத்தின் இணையதளத்துக்கு அனுப்பப்படுவதற்கு முன்பு பின்பற்றப்படும் முறை காரணமாக, வெவ்வேறு மாநிலங்களைச் சேர்ந்த சில வாக்காளர்களுக்கு ஒரே மாதிரியான வாக்காளர் அடையாள அட்டை எண்கள் ஒதுக்கப்படுவதாக விளக்கம் அளித்தது.
இதற்குப் பின்னரும் பல்வேறு கட்சிகள் தொடர்ந்து தேர்தல் ஆணையத்தின் மீது புகார் கூறி வருகின்றன. இந்நிலையில், தேர்தல் நடைமுறைகளை வலுப்படுத்த யோசனைகளை தெரிவிக்கலாம் என்று அரசியல் கட்சிகளுக்கு தலைமைத் தேர்தல் ஆணையம் நேற்று அழைப்பு விடுத்துள்ளது. தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள், நடைமுறைகளின் மீது எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை முன்வைத்து வரும் நிலையில் இந்த அழைப்பை தேர்தல் ஆணையம் விடுத்துள்ளது
இதுதொடர்பாக தலைமைத் தேர்தல் ஆணையம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: வரும் 30-ம் தேதிக்குள் தேர்தல் ஆணைய செயல்பாடுகளை வலுப்படுத்தும் விதமாக அரசியல் கட்சிகள் யோசனைகளைத் தெரிவிக்கலாம். இதன்மூலம்
தேர்தல் நடைமுறைகளை நாம் வலுப்படுத்த முடியும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து வரும் 30-ம் தேதிக்குள் யோசனைகளைத் தெரிவிக்குமாறு கோரி, நாடு முழவதும் உள்ள அரசியல் கட்சிகளுக்கு, கடிதத்தை தேர்தல் ஆணையம் அனுப்பியுள்ளது.