தேர்தல் நடைமுறைகளை எவ்வாறு மேம்படுத்தலாம் என்பது குறித்து, அரசியல் கட்சிகளின் தலைவர்களுடன் தேர்தல் ஆணையம் விரைவில் ஆலோசனை செய்ய உள்ளது.
இதுதொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தற்போது நடைமுறையில் உள்ள தேர்தல் நடைமுறைகளை சட்ட வரையறைகளுக்கு உட்பட்டு எவ்வாறு மேம்படுத்தலாம் என்பது குறித்து அரசியல் கட்சி தலைவர்களுடன் கலந்து ஆலோசனை செய்ய தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.
அதன்படி, தலைமை தேர்தல் அலுவலர், மாவட்டத் தேர்தல் அலுவலர், தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் நிலையில் தீர்க்கப்படாத பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் வகையில் கருத்துகளையும் ஆலோசனைகளையும் ஏப்.30-ம் தேதிக்குள் தெரிவிக்குமாறு அனைத்து தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சிகளை இந்திய தேர்தல் ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது.
இதுதொடர்பாக அரசியல் கட்சிகளுக்கு தனித்தனியாக அனுப்பப்பட்ட கடிதத்தில், தேர்தல் நடைமுறைகளை மேம்படுத்துவது குறித்து கலந்து ஆலோசிக்கும் வகையில் இரு தரப்புக்கும் வசதியாக நேரத்தை தெரிவிக்குமாறும் கூறியுள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.