பிலிப்பைன்ஸ் முன்னாள் அதிபர் கைது

மணிலா,

பிலிப்பைன்ஸ் முன்னாள் அதிபர் ரோட்ரிகோ டுடேர்த்தே. இவர் 2016 முதல் 2022 வரை பிலிப்பைன்ஸ் அதிபராக செயல்பட்டார். அதற்குமுன் 2011ம் ஆண்டு டவொவா மாகாண மேயராகவும் அவர் செயல்பட்டார்.

இதனிடையே, மேயர், அதிபராக இருந்த கால கட்டத்தில் போதைப்பொருள் கும்பலுக்கு எதிராக ரோட்ரிகோ டுடேர்த்தே கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டார்.

போதைப்பொருள் கும்பலை சேர்ந்தவர்கள் என பலர் கொல்லப்பட்டனர். இதில் பொதுமக்களும் கொல்லப்பட்டனர். இந்த படுகொலை தொடர்பாக மனித உரிமை மீறலில் ஈடுபட்டதாக ரோட்ரிகோ டுடேர்த்தேவுக்கு எதிராக ஐ.நா. சர்வதேச குற்றவியல் கோர்ட்டில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகார் தொடர்பாக சர்வதேச கோர்ட்டு விசாரணை நடத்தி வந்த நிலையில் பிலிப்பைன்சில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. அதேவேளை, இந்த வழக்கில் ரோட்ரிகோ டுடேர்த்தேவை கைது செய்ய சர்வதேச கோர்ட்டு உத்தரவிட்டது.

இந்த உத்தரவை தொடர்ந்து ஹாங்காங்கில் இருந்து விமானம் மூலம் பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலா வந்த முன்னாள் அதிபர் ரோட்ரிகோ டுடேர்த்தேவை இண்டர்போல் (சர்வதேச போலீஸ்) அதிகாரிகள் நேற்று கைது செய்தனர். விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட ரோட்ரிகோ சர்வதேச கோர்ட்டில் ஆஜர்படுத்த விமானம் மூலம் நெதர்லாந்து அழைத்து செல்லப்பட்டுள்ளார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.