இறை வணக்கம் உருது மொழியில் நடத்தியதாக பிஹார் பள்ளி முதல்வர், ஆசிரியர் இடமாற்றம்

பாட்னா: இறை வணக்கத்தை உருது மொழியில் நடத்தியதாக பிஹாரிலுள்ள ஒரு பள்ளியின் முதல்வர், ஆசிரியர் ஆகியோர் இடமாற்றம் செய்யப்பட்டனர்.

பிஹார் மாநிலம் கயா மாவட்டம் அன்டி போலீஸ் சரகத்துக்குட்பட்ட ஜமால்பூர் கிராமத்தில் அரசு நடுநிலைப்பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் கடந்த 8-ம் தேதி காலை உருது மொழியில் இறை வணக்கம் நடத்தப்பட்டதாக புகார் எழுந்தது. பள்ளியின் முதல்வர், ஆசிரியர் ஆகியோர் இறை வணக்கத்தை உருதுமொழியில் நடத்துமாறு உத்தரவிட்டுள்ளனர்.

இதுதொடர்பாக மாணவர்கள் தங்கள் பெற்றோரிடம் புகார் செய்தனர். இது கிராம மக்களுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் அந்தக் கிராமத்தைச் சேர்ந்த சிலர், பள்ளிக்கு வந்து அங்குள்ள ஆசிரியர் அஜய் பிரசாத் என்பவரைத் தாக்கியுள்ளனர். அவரது சட்டையைக் கழித்து, அடித்து உதைத்துள்ளனர். இதுதொடர்பாக போலீஸ் நிலையத்தில் அஜய் பிரசாத் புகார் கொடுத்தார்.

அவர் கொடுத்த புகாரின் பேரில் ஜமால்பூர் கிராமத்தைச் சேர்ந்த முகமது சோரப், முகமது ஜாவேத் உள்ளிட்ட 9 பேர் மீது முதல் தகவல் அறிக்கை (எப்ஐஆர்) பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து, உருது மொழியில் இறை வணக்கம் நடத்திய பள்ளி முதல்வர், ஆசிரியர் ஆகிய 2 பேரும் வேறு பள்ளிக்கு இடமாற்றம் செய்ய பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.