டேராடூன்,
9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடரில் துபாயில் அரங்கேறிய இறுதிப்போட்டியில் முன்னாள் சாம்பியன்களான இந்தியா- நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுக்கு 251 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக டேரில் மிட்செல் 63 ரன்கள் அடித்தார். இந்திய தரப்பில் குல்தீப் யாதவ், வருண் சக்ரவர்த்தி தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
பின்னர் 252 ரன்கள் இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி 49 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 254 ரன்கள் சேர்த்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கோப்பையை சொந்தமாக்கியது. அதிகபட்சமாக கேப்டன் ரோகித் சர்மா 76 ரன்கள் அடித்தார். அவரே ஆட்ட நாயகனாவும் தேர்வு செய்யப்பட்டார்.
மேலும் கங்குலி, தோனிக்கு பிறகு சாம்பியன்ஸ் டிராபி கோப்பையை வென்ற இந்திய கேப்டனாக சாதனை படைத்தார். அத்துடன் டி20 உலகக்கோப்பை மற்றும் சாம்பியன்ஸ் டிராபி ஆகிய ஐ.சி.சி. கோப்பைகளை வென்ற ஒரே கேப்டன் என்ற தோனியின் மகத்தான சாதனையை அவர் சமன் செய்தார்.
இந்நிலையில் ரிஷப் பண்டின் சகோதரியின் திருமணத்தில் கலந்து கொள்வதற்காக டேராடூன் சென்ற தோனியை விமான நிலையத்தில் வைத்து சூழ்ந்து கொண்ட பத்திரிகையாளர்கள் சாம்பியன்ஸ் டிராபி குறித்து கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளிக்க மறுத்த தோனி, போ.. போ.. என்ற வகையில் கையசைத்து விட்டு சென்றார். இதன் காரணமாக மகேந்திரசிங் தோனியை ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.