புதுடெல்லி,
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையால் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருகின்றனர். அவர்களது படகுகள், வலைகள், மீன்கள் அனைத்தும் பறிமுதல் செய்யப்படுகிறது. கைது செய்யப்படும் மீனவர்கள் சிறையில் அடைக்கப்படுகின்றனர். அதிக தொகை அபராதமாக விதிக்கப்படுகிறது. ஒன்றுக்கு மேற்பட்ட முறை கைது செய்யப்படும் மீனவர்களுக்கு நீண்ட கால சிறை தண்டனை விதிக்கப்படுகிறது.
மீனவர்கள் கைது விவகாரம் தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி நிரந்தர தீர்வு காணவேண்டும், தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட வேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்
ஒவ்வொரு முறை மீனவர்கள் கைதாகும் போதும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியுறவுத் துறை மந்திரி ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதி வருகிறார். அடுத்த மாதம் பிரதமர் மோடி இலங்கை செல்ல உள்ள நிலையில் இந்த விவகாரத்திற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்ற எதிர்பார்ப்பு மீனவர்கள் மத்தியில் எழுந்திருந்தது.
இந்நிலையில் தமிழ்நாடு மீனவர் சங்க பிரதிநிதிகள், வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கரை டெல்லியில் இன்று நேரில் சந்தித்தனர்.
இதுதொடர்பாக பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-
இன்று, தமிழ்நாடு மீனவர் பேரவைத் தலைவர் அன்பழகன், ஜேசுராஜ், தமிழக பா.ஜ.க. பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம், மாநிலச் செயலாளர் சதீஷ் குமார் , மீனவர் பிரிவு மாநிலத் தலைவர் எம்.சி. முனுசாமி மற்றும் தமிழ்நாட்டின் அனைத்து கடலோர மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள் குழுவுடன், டெல்லியில் எங்கள் வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கரை சந்தித்தோம்.
எங்கள் வெளியுறவுத்துறை மந்திரி அவர்கள், தூதுக்குழுவின் குறைகளைக் கேட்டறிந்து, எங்கள் பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான மத்திய அரசின் அனைத்து ஆதரவையும், இன்று பிரதிநிதிகள் குழு எழுப்பிய கவலைகளுக்கு நிரந்தர தீர்வை அளிப்பதாக உறுதியளித்தோம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.