மொகாலியில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் சயின்ஸ் எஜுகேசன் மற்றும் ரிசர்ச் மையத்தில் டாக்டர் அபிஷேக் (39) என்பவர் விஞ்ஞானியாகப் பணியாற்றி வந்தார். ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த அபிஷேக் ஸ்விட்சர்லாந்தில் பணியாற்றி வந்தார். சமீபத்தில்தான் இந்தியா திரும்பி மொகாலியில் பணியில் சேர்ந்து இருந்தார். சிறுநீரக கோளாறால் பாதிக்கப்பட்டுள்ள அபிஷேக்கிற்கு, அவரது சகோதரி தனது ஒரு சிறுநீரகத்தை தானமாக கொடுத்திருந்தார்.

தொடர்ந்து சிகிச்சையில் இருந்து வந்த அபிஷேக் மொகாலியில் செக்டர் 67ல் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். வாடகை வீட்டில் வசித்து வந்த அவர் தனது வீட்டிற்கு வெளியில் தனது இரு சக்கர வாகனத்தை நிறுத்தி இருந்தார். அவரது இரு சக்கர வாகனம் அருகில் அவரது பக்கத்து வீட்டில் வசிக்கும் மொகந்தி உட்பட சிலர் இரு சக்கர வாகனத்தை சூழ்ந்து நின்றுகொண்டிருந்தனர். அப்போது அங்கு நின்றவர்களுக்கும் அபிஷேக்கிற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் அபிஷேக்கை அங்கு நின்று கொண்டிருந்த மொகந்தி என்பவர் கீழே பிடித்து தள்ளினார். அதோடு விடாமல் தரையில் விழுந்து கிடந்த அபிஷேக்கை மொகந்தி தொடர்ந்து அடித்து உதைத்தார்.
அதற்குள் அபிஷேக் குடும்பத்தினர் ஓடி வந்து மொகந்தியை விரட்டிவிட்டு அபிஷேக்கை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அபிஷேக் பரிதாபமாக இறந்து போனார். சம்பவம் நடந்த இடத்தில் இருந்த கண்காணிப்பு கேமரா பதிவு சோசியல் மீடியாவில் பகிரப்பட்டு வருகிறது. அக்கேமரா பதிவின் அடிப்படையில் மொகந்தி மீது கொலைக்கு நிகரான வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அபிஷேக் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.