சண்டிகர்,
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் பகுதியில் சீக்கியர்களின் புனித தளமான பொற்கோவில் அமைந்துள்ளது. இங்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான சீக்கியர்கள் வருகை தந்து வழிபாடு செய்கின்றனர்.
இந்நிலையில், பொற்கோவில் வளாகத்திற்குள் இன்று இரும்புக்கம்பியுடன் நுழைந்த ஒரு நபர், அங்கிருந்த பக்தர்கள் மீது சரமாரியாக தாக்குதல் நடத்த தொடங்கினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
அங்கிருந்த மக்கள் தாக்குதல் நடத்திய நபரை மடக்கிப் பிடித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இந்த தாக்குதலில் 5 பேர் படுகாயமடைந்த நிலையில், அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், தாக்குதல் நடத்திய நபரை கைது செய்தனர். அந்த நபரின் பெயர் சுல்பான் என்பதும், அவர் அரியானா மாநிலத்தை சேர்ந்தவர் என்பதும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த தாக்குதலுக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பொற்கோவிலுக்குள் பக்தர்கள் மீது இரும்புக்கம்பியால் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக கடந்த டிசம்பர் மாதம் சிரோமணி அகாலி தளம் கட்சியின் தலைவர் சுக்பீர் சிங் பாதலை பொற்கோவில் வளாகத்தில் நாராயண் சிங் சவுரா என்ற நபர் துப்பாக்கியால் சுட முயற்சி செய்தார். இதில் சுக்பீர் சிங் பாதல் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.