தங்கக் கடத்தல் வழக்கில் கைதான நடிகை ரன்யா ராவின் ஜாமீன் மனு நிராகரிப்பு

பெங்களூரு: தங்கக் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகை ரன்யா ராவின் ஜாமீன் மனுவை, பொருளாதார குற்றவியல் நீதிமன்றம் நிராகரித்துள்ளது. இந்த வழக்கின் இரண்டாவது குற்றவாளியான தருண் ராஜு 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டார்.

கர்நாடக போலீஸ் டிஜிபி ராமசந்திர ராவின் வளர்ப்பு மகளும், நடிகையுமான ரன்யா ராவ் (32) துபாயில் இருந்து 14.8 கிலோ தங்கம் கடத்தி வந்ததாக கடந்த 3-ம் தேதி பெங்களூரு விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். இது குறித்து வழக்குப் பதிவு செய்த வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள், அவரது வீட்டில் நடத்திய சோதனையில் ரூ.2.67 கோடி ரொக்கப்பணம், ரூ.2.06 கோடி மதிப்பிலான தங்க நகைகளை கைப்பற்றினர்.

ரன்யா ராவிடம் நடத்திய விசாரணையில், அவருக்கு சர்வதேச தங்கக் கடத்தல் கும்பலுடன் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. மேலும், சில முக்கிய பிரமுகர்களுக்கும், பெரிய நகைக் கடை அதிபர்களுக்கும் தங்கம் கடத்திவந்து கொடுத்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து சிபிஐ அதிகாரிகள் ரன்யா ராவ் மீது வழக்குப் பதிவு செய்து, மும்பை, பெங்களூரு விமான நிலையங்களில் விசாரணையை தொடங்கினர்.

இந்நிலையில், ரன்யா ராவ் மீது அமலாக்கத் துறை அதிகாரிகள் நேற்று புதிய வழக்கு ஒன்றை பதிவு செய்தனர். அந்த வழக்கு தொடர்பாக பெங்களூருவில் உள்ள லேவல்லி சாலை, எம்ஜி சாலை உட்பட 5 இடங் களில் சோதனை மேற்கொண் டனர். ரன்யா ராவுடன் தொடர் பில் உள்ள நபர்களுக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தப்பட்டதாக அமலாக்கத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதனிடையே, தங்க கடத்தல் வழக்கில் ஜாமீன் கோரி ரன்யா ராவ் தாக்கல் செய்த மனுவை, பொருளாதார குற்றவியல் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மேலும், இந்த வழக்கில் இரண்டாவது குற்றவாளியான நட்சத்திர ஹோட்டல் அதிபர் தருண் ராஜு 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

தங்கக் கடத்தல் வழக்கில் தருண் ராஜு கடந்த 12-ம் தேதி கைது செய்யப்பட்டார். அவரிடம் வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் 3 நாட்கள் விசாரணை நடத்தினர். இதனையடுத்து இன்று அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இதையடுத்து, அவரை 15 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.