TN Budget 2025: 'சொன்னதைச் செய்வோம் என்பது காற்றில் போச்சு' – பட்ஜெட் குறித்து தலைமைச் செயலக சங்கம்

தமிழ்நாடு சட்டப்பேரவையில், இன்று 2025-2026-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார்.

2026ம் ஆண்டு தேர்தல் நெருங்குவதால் இந்த பட்ஜெட் பெரிதும் கவனிக்கத்தக்க பட்ஜெட்டாக இருந்தது. மகளிர், மாணவர்கள், மருத்துவத்துறை, நீர்வளத் துறை, தொழில்துறை எனப் பல்வேறு துறைகளில் முக்கிய அறிவிப்புகள் வெளியாகின. கல்லூரி மாணவிகளுக்கு கணினி, 40,000 அரசுப் பணியிடங்கள் நிரப்பப்படும், திருவான்மியூர் – உத்தண்டி 4 வழித்தட உயர்மட்டச் சாலை, 1000 ஆண்டு பழைமையான கோயில்களுக்கு திருப்பணி, ரூ.1051 கோடியில் 5256 குடியிருப்புகள், சென்னை மெட்ரோ ரயில் விரிவாக்கம், சென்னையில் மழைநீர் உறிஞ்சும் 7 பல்லுயிர்ப் பூங்காக்கள் எனப் பல திட்டங்களை அறிவித்திருந்தது தி.மு.க அரசு.

TN Budget 2025

இந்நிலையில் இந்த பட்ஜெட் குறித்த விவாதங்கள் சமூக வலைதளம், ஊடகங்களில் தொடங்கிவிட்டன. இந்த பட்ஜெட்டைப் பாராட்டி ஒருதரப்பும், விமர்சித்து மறுதரப்பும் கருத்துத் தெரிவித்து வருகின்றன.

அவ்வகையில் தமிழ்நாடு தலைமைச் செயலகச் சங்கம், இந்த பட்ஜெட்டில் நிறைய ஏமாற்றங்கள் இருப்பதாக அடுக்கடுக்காகப் பல விஷயங்களை கேள்வியெழுப்பியிருக்கிறது.

இது குறித்து வெளியாகியிருக்கும் அறிக்கையில், “அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கு சொன்னதைச் செய்யாமல் சொல்லாததையும் செய்கிற போக்கு தொடர் கதையாகி வருகிறது. 2025-26 பட்ஜெட்டில் அரசு ஊழியர்களின் தேர்தல் கால வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான எந்த அறிவிப்பும் இல்லை. அரசு ஊழியர்களின் தேர்தல் கால வாக்குறுதிகளை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் நிறைவேற்றுவார் என்பது கானல் நீராகிப் போனது. சரண் விடுப்பு சலுகை திரும்ப அளிப்பதை 2026-27 பட்ஜெட்டில் வெளியிட வேண்டிய அறிவிப்பினை தற்போது வெளியிட்டு அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கு செய்த ஊழியர் விரோத போக்கினை வன்மையாகக் கண்டிக்கிறோம். 2025-26 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் சமூகத்தினை திராவிட மாடல் அரசு முழுமையாகப் புறக்கணித்துள்ளது.

2021 தேர்தலில் வெற்றி பெற்று திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி அமைந்ததும் கடந்த 10 ஆண்டுகளில் நிறைவேற்றப்படாத ஆசிரியர்கள்-அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் நிறைவேறும் என்ற எதிர்பார்ப்பு என்பது கடந்த நான்கு ஆண்டுகளாக எந்த வகையிலும் நிறைவேற்றப்படாமல் ஏமாற்றம் தான் மிஞ்சியது. 2021-26 திராவிட மாடல் ஆட்சியில் தற்போது வெளியிடப்பட்ட ஐந்தாவது 2025-26 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டிலும் இதே நிலைதான் தொடர்கிறது.

சொல்லாதையும் செய்வோம் என்ற நிலைப்பாடு

*இதுவரை தமிழ்நாடு வரலாற்றில் இல்லாத வகையில், அடுத்த நிதியாண்டிற்கான அறிவிப்பாக வெளியிட வேண்டிய சரண் விடுப்பு சலுகை அறிவிப்பினை, ஏதோ ஆசிரியர்கள்-அரசு ஊழியர்கள் மீது கரிசனம் உள்ளதைப் போல் 1-4-2026 முதல் செயல்படுத்தப்படும் என்ற ஊழியர் விரோத போக்கினை தமிழ்நாடு தலைமைச் செயலகச் சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது.

*அடுத்த நிதியாண்டிற்கான திராவிட மாடல் அரசின் பட்ஜெட் என்பது இடைக்கால பட்ஜெட் தான். இது அனைவருக்கும் தெரிந்த விஷயம். 2026ல் சட்டமன்றத் தேர்தல் நடைபெற்ற பின்னர் ஆட்சிப் பொறுப்பில் அமரப் போகிறவர்கள்தான் இந்திய அரசியலமைப்பின்படி 2026-27 ஆம் ஆண்டிற்கான முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்ய இயலும்.

தமிழ்நாடு தலைமைச் செயலகச் சங்கத்தின் அறிக்கை

*சரண்டர் 2026-27 வழங்குவதற்கான செலவினத்தினை மேற்கொள்வதற்கு பட்ஜெட்டில்தான் நிதி ஒதுக்கம் செய்ய இயலும் என்று தெரிந்திருந்த போதும், தற்போது ஏதோ அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் மீது கருணை உள்ளத்தோடு நாங்கள் செயல்படுகிறோம் என்ற பொதுமக்கள் பார்வையில் பொய்யான பிம்பத்தினை கட்டமைக்கும் நோக்கம் என்பது கேலிக் கூத்தானது.

*இந்த அறிவிப்பு என்பது முழுக்க முழுக்க நிதி மேலாண்மை விழுமியங்களுக்கு எதிரானது.

சொன்னதைச் செய்வோம் என்பது காற்றில் போச்சு

*2021 சட்டமன்றத் தேர்தலின்போது ஆசிரியர்கள்-அரசு ஊழியர்களுக்கு அளித்த முதன்மையாக வாக்குறுதியான பழைய ஓய்வூதியத் திட்டத்தினை நடைமுறைப்படுத்துவதை விட்டுவிட்டு பழைய ஓய்வூதியத் திட்டம், பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டங்கள் குறித்து விரிவாக ஆராய்ந்திடவும் மாநில அரசின் நிதி நிலைமையையும் பணியாளர்களின் ஓய்வூதியக் கோரிக்கைகளையும் கருத்தில் கொண்டு புதிய ஓய்வூதிய முறை குறித்து பரிந்துரைப்பதற்காக அதிகாரிகள் குழு அமைத்து அதற்கு ஒன்பது மாதங்கள் கால அவகாசம் வழங்கியபோதே, திராவிட மாடல் அரசு மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தினை நடைமுறைப்படுத்தாது என்பது நிரூபணம் ஆகியிருந்தது.

*தற்போது 2025-26 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டிலும் பழைய ஓய்வூதியம் குறித்து எந்த அறிவிப்பினையும் வெளியிடாதது என்பது நாங்கள் சொன்னதைச் செய்ய மாட்டோம் என்பதற்கு சாட்சியம் அளித்துள்ளது.

TN Budget 2025 LIVE

TN Budget 2025 LIVE : `1% பதிவுக் கட்டணம் குறைப்பு டு 40,000 பணியிடங்கள்!’ – தமிழக பட்ஜெட்டின் முழு விவரம்!

*காலிப் பணியிடங்களைப் பொறுத்தவரையில், கடந்த நான்காண்டுகளில் 78,882 பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளதாவும் இந்த ஆண்டில் மட்டும் 40,000 பணியிடங்கள் நிரப்பப்படும் என்று மாண்புமிகு நிதியமைச்சர் அறிவித்துள்ளார். தமிழ்நாடு அரசிலுள்ள 4 லட்சம் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான எந்தவித முன்மாதிரி அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.

*இது ஆட்சி நிர்வாகத்தினை வெகுவாக பாதிக்கும் என்பதோடு, படித்த இளைஞர்களின் அரசு வேலைக் கனவினைச் சிதைப்பதோடு, 69 விழுக்காடு இட ஒதுக்கீடு என்ற சமூக நீதியினையும் சிதைக்கிறது.

*ஆசிரியர்கள்-அரசு ஊழியர்கள் கோரிக்கைகள் குறித்து எதிர்கட்சித் தலைவராக இருக்கும்போது ஒருநிலைப்பாடும் தமிழகத்தின் முதலமைச்சராக அமர்ந்த பின்னர் வேறொரு நிலைப்பாடும் எடுப்பது என்பது மாண்புமிகு முதலமைச்சரின் மீதான நம்பகத்தன்மையினை இழக்கச் செய்துள்ளது. மாண்புமிகு முதலமைச்சரின் இந்த போக்கு என்பது ஆசிரியர்கள்- அரசு ஊழியர்களுக்கு மட்டுமல்லாது ஒட்டு மொத்த தமிழ் சமூகத்திற்கும் அச்சத்தினை உருவாக்கக் கூடியது.

மொத்தத்தில் இந்த 2025-26 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் என்பது ஆசிரியர்கள் அரசு ஊழியர்களுக்கு எதிரான பட்ஜெட். தேர்தல் வாக்குறுதிகளை நான்கு ஆண்டுகள் கடந்த நிலையிலும் நிறைவேற்றாமல் ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் என்ற சமூகத்தினை புறக்கணித்திருக்கிறது திராவிட மாடல் அரசு.

கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத ஆட்சியாளர்களை ஆசிரியர்கள்-அரசு ஊழியர்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள். கோரிக்கைகளை வெல்வதற்கும் ஊழியர் விரோத போக்கிற்கு எதிராகவும் ஆசிரியர்கள்-அரசு ஊழியர்கள் மிகுந்த எழுச்சியோடு களம் காணத் தயராகி விட்டனர்.” என்று குறிப்பிட்டு ஆதங்கத்தைக் கொட்டியிருக்கிறது தமிழ்நாடு தலைமைச் செயலகச் சங்கம்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.