தங்கக் கடத்தல் வழக்கில் கைதான நடிகை ரன்யா ராவுக்கு ஜாமீன் வழங்க பெங்களூரு நீதிமன்றம் மறுத்துவிட்டது.
கர்நாடக போலீஸ் டிஜிபி ராமசந்திர ராவின் வளர்ப்பு மகளும், நடிகையுமான ரன்யா ராவ் (32) துபாயில் இருந்து 14.8 கிலோ தங்கம் கடத்தி வந்ததாக கடந்த 3-ம் தேதி பெங்களூரு விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.
இதையடுத்து, வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், அவரது வீட்டில் நடத்திய சோதனையில் ரூ.2.67 கோடி ரொக்கம், ரூ.2.06 கோடி மதிப்பிலான தங்க நகைகளும் கைப்பற்றப்பட்டன.
ரன்யா ராவுக்கு, சர்வதேச தங்க கடத்தல் கும்பல் மற்றும் பெங்களூருவின் முக்கிய புள்ளிகளுடன் தொடர்பு இருப்பது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து நட்சத்திர விடுதி உரிமையாளர் தருண் ராஜ் கைது செய்யப்பட்டார்.
ஜாமீன் மனு தள்ளுபடி: தங்க கடத்தலில் ஈடுபட்ட ரன்யா ராவ் மீது அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் ரன்யா ராவ் ஜாமீன் கோரி பெங்களூரு பொருளாதார குற்றப்பிரிவு சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது ரன்யா ராவ் தரப்பில், இவ்வழக்கின் காரணமாக கடும் மன உளைச்சல் ஏற்பட்டிருப்பதால் சிகிச்சை எடுத்துக்கொள்வதற்காக ஜாமீன் கோரப்பட்டது.
அப்போது, வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் தரப்பில் கடும் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டதையடுத்து நீதிமன்றம் ரன்யா ராவின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது. இதையடுத்து அவர் பெங்களூரு மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
யூடியூப் பார்த்து தங்கம் கடத்த கற்றுக்கொண்டேன்: வருவாய் புலனாய்வு இயக்குநரக விசாரணையில் நடிகை ரன்யா ராவ், ”நான் துபாயில் ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டுள்ளேன். அதற்காகவே அங்கு 27 முறை சென்று வந்தேன். எனது நண்பர் தருண் ராஜூ கேட்டதால் முதல் முறையாக துபாயில் இருந்து தங்கம் கடத்தி வந்தேன். தங்க கடத்தலை எவ்வாறு மேற்கொள்வது என்பது குறித்து யூ டியூப்பில் பார்த்து தெரிந்துகொண்டேன்.
துபாயில் எந்த சர்வதேச கும்பலுடனும் எனக்கு தொடர்பு இல்லை. துபாய் விமான நிலையத்தில் 6 அடி உயர அமெரிக்கரை போல ஆங்கிலம் பேசிய நபர் எனக்கு 12 தங்க கட்டிகளை கொடுத்தார். அதனை எனது தொடையில் மறைத்து கொண்டுவந்தேன்”என வாக்குமூலம் அளித்துள்ளார்.