தேனி: சட்டசபை தேர்தல் நடக்கும் போது திமுக ஆட்சியில் இருந்தால் அதிகாரத்தில் தவறாக பயன்படுத்துவார்கள் அதனால் இந்த அரசை டிஸ்மிஸ் செய்துவிட்டு தேர்தல் நடத்த வேண்டும் என்று இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் தெரிவித்துள்ளார்.
தேனியில் இந்து மக்கள் கட்சி தொண்டரணி சார்பில் மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
பின்பு அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தேனி மாவட்டத்தில் மாவோயிஸ்டுகள், நக்சலைட் நடமாட்டம் இருக்கின்றது. இது குறித்து போலீஸார் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. கடன்கார பட்ஜெட்டாக தமிழகஅரசின் பட்ஜெட் உள்ளது.
திமுக குடும்பத்தினர் நடத்தும் தொழில்கள் அனைத்தும் லாபத்தில் இயங்குகிறது ஆனால் திமுக அரசு மட்டும் நஷ்டத்தில் இயங்குகிறது. டாஸ்மாக் ஊழல் 2ஜி ஊழலையும் மிஞ்சிவிட்டது.
சட்டசபை தேர்தல் நடக்கும் போது திமுக ஆட்சியில் இருந்தால் அதிகாரத்தில் தவறாக பயன்படுத்துவார்கள் அதனால் இந்த அரசை டிஸ்மிஸ் செய்துவிட்டு தேர்தல் நடத்த வேண்டும்.
முல்லை பெரியாறு அணை உடைந்து விடும் என கம்யூனிஸ்ட் கட்சிகள் கேரளா மக்கள் மத்தியில் பீதியை கிளப்பி வருகின்றனர். இதனால் இது இருமாநிலங்கள் இடையே நல்லுறவை சிதைந்துள்ளது. தமிழ்நாட்டுக்கு துரோகம் செய்வதையே கம்யூனிஸ்ட் கட்சிகளின் வேலையாக இருக்கிறது இவ்வாறு அவர் தெரிவித்தார்.