ஹைதராபாத்: தெலங்கானாவில் பாஜக ஆட்சி அமைந்ததும் அசதுத்தீன் ஓவைஸியை நாடு கடத்துவோம் என பாஜக எம்.எல்.ஏ ராஜாசிங்கின் பேச்சால் ஹைதராபாத்தில் பெரும் சர்ச்சை எழுந்துள்ளது.
ஹைதராபாத் கோஷாமஹால் சட்டமன்ற தொகுதியின் பாஜக எம்.எல்.ஏ ராஜாசிங். இவர் அடிக்கடி ஏதாவது பேசி சர்ச்சையில் சிக்குவது வழக்கம். பாஜக மேலிடம் கூட இவரை சிறிது நாட்கள் கட்சியில் இருந்து நீக்கி இருந்தது. அதன் பின்னர், இவர் மன்னிப்பு கோரியதால், மீண்டும் கடந்த தேர்தலில் சீட் கொடுத்தது. இவரும் தொடர்ந்து கோஷாமஹால் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்நிலையில், ராஜாசிங் பேசியாதாவது:
ரம்ஜான் நோன்பு வேளையில் ஹைதராபாத் எம்பி யான அசதுத்தீன் ஓவைஸி மத கலவரத்தை தூண்டும் வகையில் பேசி வருகிறார். சமீபத்தில் கூட இவர், ஹோலி பண்டிகையில் பிரச்சனையை உண்டாக்கும்படி பேசினார். இது மிகவும் கண்டிக்க தக்கது.
தெலங்கானாவில் பாஜக ஆட்சி அமைத்ததும், அசதுத்தீன் ஓவைஸி நாடு கடத்தப்படுவார். இல்லையெனில், அவர் பாஜகவில் இணைவதாக கட்சி தலைவர்களின் காலில் விழுந்து கெஞ்சினால் மட்டுமே இவர் இந்தியாவில் வசிப்பது குறித்து ஆலோசிக்கப்படும்.
சமீப காலமாக அசதுத்தீன் மன வளர்ச்சி குன்றியவர் போல் பேசுகிறார். ஆதலால், அவரது நண்பரான தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டிதான் அவரை ஒரு நல்ல மருத்துவமனையில் கொண்டு போய் சேர்க்க வேண்டும். இவ்வாறு ராஜாசிங் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.