புதுடெல்லி: யுனெஸ்கோ பாரம்பரிய சின்ன அங்கீகாரத்துக்கான உத்தேச பட்டியலில் புதிதாக 6 இந்திய வரலாற்று சின்னங்கள் சேர்க்கப்பட்டு உள்ளன.
ஐ.நா. சபையின் யுனெஸ்கோ அமைப்பு, உலகம் முழுவதும் உள்ள பாரம்பரிய சின்னங்களுக்கு அங்கீகாரம் வழங்கி வருகிறது. இதன்படி வனம், மலை, ஏரி, பாலைவனம், நினைவு சின்னம், கட்டிடம் உள்ளிட்டவற்றுக்கு பாரம்பரிய சின்னம் அங்கீகாரம் வழங்கப்படுகிறது.
தற்போதைய நிலையில் யுனெஸ்கோ அமைப்பால் உலகம் முழுவதும் 1,223 பாரம்பரிய சின்னங்களுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டிருக்கிறது. இதில் இந்தியாவில் மட்டும் 43 பாரம்பரிய சின்னங்கள் உள்ளன. கடந்த 1998-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரை 56 இந்திய வரலாற்று சின்னங்களுக்கு அங்கீகாரம் கோரப்பட்டு நிலுவையில் உள்ளன. இவை யுனேஸ்கோவின் உத்தேச பட்டியலில் உள்ளன. இந்த சூழலில் புதிதாக 6 இந்திய வரலாற்று சின்னங்களும் தற்போது உத்தேச பட்டியலில் சேர்க்கப்பட்டு உள்ளன.
தெலங்கானாவின் நாராயணன்பேட்டை மாவட்டம், முதுமல் பகுதியில் சுமார் 1,200-க்கும் மேற்பட்ட பெருங்கற்கால நெடுங்கற்கள் உள்ளன. இது யுனெஸ்கோ பாரம்பரிய சின்ன அங்கீகாரத்துக்கான உத்தேச பட்டியலில் சேர்க்கப்பட்டிருக்கிறது.
இதேபோல சத்தீஸ்கரில் உள்ள காங்கேர் தேசிய பூங்கா, பல்வேறு மாநிலங்களில் அமைந்துள்ள அசோகர் கால கல்வெட்டுகள், மத்திய பிரதேசத்தின் முரைனா மாவட்டத்தில் அமைந்துள்ள சவுசத் யோகினி கோயில்கள், வடமாநிலங்களில் அமைந்துள்ள குப்தர் கால கோயில்கள், மத்திய பிரதேசம், உத்தர பிரதேசத்தில் உள்ள பண்டேலா கோட்டைகள் ஆகியவையும் யுனெஸ்கோ உத்தேச பட்டியலில் சேர்க்கப்பட்டு இருக்கிறது. இதுகுறித்து மத்திய அரசு வட்டாரங்கள் கூறியதாவது:
யுனெஸ்கோ பாரம்பரிய சின்ன அங்கீகாரத்துக்காக முதலில் உத்தேச பட்டியலில் பெயர் சேர்க்க வேண்டும். அதன்பிறகு பரிந்துரை குழு, ஆலோசனை குழு, உலக பாரம்பரிய கமிட்டி என அடுத்தடுத்து பல்வேறு நிலைகளை தாண்ட வேண்டும். இதற்கு பல ஆண்டுகள் ஆகலாம்.
புதிதாக 6 வரலாற்று சின்னங்களை யுனெஸ்கோ உத்தேச பட்டியலில் சேர்த்துள்ளோம். இவற்றையும் சேர்த்து 62 இந்திய பாரம்பரிய சின்னங்கள் நிலுவையில் இருக்கின்றன. உலகம் முழுவதும் சுமார் 181 நாடுகளை சேர்ந்த 1,756 வரலாற்று சின்னங்கள் பரிசீலனையில் இருக்கிறது.
இவ்வாறு மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.