அரசுப் பள்ளியில் ஆசிரியர் தாக்கியதால் பாதிக்கப்பட்ட மாணவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து, மாணவரை தாக்கிய உடற்கல்வி ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். தலைமை ஆசிரியை பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
விழுப்புரம் மாவட்டம் கோலியனூர் அருகேயுள்ள வி.அகரம் கிராமத்தில் அரசு ஆதிதிராவிடர் நல உயர்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் நேற்று முன்தினம் 6-ம் வகுப்பு படித்து வரும் ஒரு மாணவர், தன்னுடன் பயிலும் சக மாணவி ஒருவருடன் சண்டையிட்டு, கையால் அடித்துள்ளார். இதைக்கண்ட உடற்கல்வி ஆசிரியர் செங்கேனி சண்டையை தடுத்து நிறுத்தி, அந்த மாணவரை அடித்ததாகக் கூறப்படுகிறது.
பின்னர், அந்த மாணவர் வாந்தி எடுத்து, மயங்கி விழுந்துள்ளார். உடனே பள்ளியில் இருந்த ஆசிரியர்கள் அந்த மாணவரை அரசமங்கலம் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். அங்கு முதலுதவி அளிக்கப்பட்ட பின்னர், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மாணவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பின்னர், மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
பள்ளி முற்றுகை… இந்நிலையில், மாணவரைத் தாக்கிய உடற்கல்வி ஆசிரியர் செங்கேனி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாணவரின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் 60-க்கும் மேற்பட்டோர் வி.அகரம் அரசு உயர்நிலைப் பள்ளியை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்த வளவனூர் போலீஸார் அங்கு சென்று, போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து, விழுப்புரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அறிவழகன், சம்பந்தப்பட்ட பள்ளிக்கு நேரில் சென்று, பாதிக்கப்பட்ட மாணவரின் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். மேலும், பள்ளியில் பணியாற்றி வரும் ஆசிரியர்களிடம் விசாரணை மேற்கொண்டார்.
போலீஸார் வழக்கு பதிவு: தொடர்ந்து, மாணவரைத் தாக்கிய உடற்கல்வி ஆசிரியர் செங்கேனியை பணியிடை நீக்கம் செய்தும், பள்ளியின் தலைமை ஆசிரியை ஜோதிலட்சுமியை பணியிட மாற்றம் செய்தும் முதன்மைக்கல்வி அலுவலர் உத்தரவிட்டார். இதற்கிடையில், மாணவரின் தந்தை வளவனூர் காவல்நிலையத்தில் கொடுத்த புகாரின்பேரில், உடற்கல்வி ஆசிரியர் மற்றும் தலைமை ஆசிரியை மீது போலீஸார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.