சந்திரயான்-5 திட்டத்துக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளதாக இஸ்ரோ தலைவர் வி. நாராயணன் தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரியில் நிகழ்ச்சியொன்றில் பங்கேற்ற அவர் இதுகுறித்து மேலும் கூறியதாவது: சந்திரயான்-5 திட்டத்துக்கான அனுமதியை மத்திய அரசிடமிருந்து மூன்று நாட்களுக்கு முன்னர்தான் பெற்றுள்ளோம். இந்த திட்டத்தில் ஜப்பானுடன் இணைந்து நாங்கள் செயல்பட உள்ளோம். இது, சந்திரயான்-5 திட்டத்தின் அறிவியல் திறன்களை மேலும் அதிகரிக்கும் என்று நம்பப்படுகிறது.
2023 ஆகஸ்ட் 23-ல் சந்திரயான்-3 வெற்றிகரமாக நிலவின் தென் துருவத்தில் எந்தவித சேதாரமும் இன்றி சாப்ட் லேண்டிங் மூலம் விக்ரம் லேண்டரை தரையிறக்கியது. இதன் மூலம், இந்த சாதனையை படைத்த உலகின் நான்காவது நாடு என்ற பெருமை ரஷ்யா, அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியாவுக்கு கிடைத்தது.
சந்திரயான்-5 திட்டம் நிலவை முழுமையாக ஆராய்ச்சி செய்யும் நோக்கம் கொண்டது. எனவே, சந்திரயான் 3 -ல் பயன்படுத்தப்பட்டது போன்று சிறிய வகை ரோவர் இதில் இடம்பெறாது. அதற்கு பதிலாக 250 கிலோ எடையுள்ள பெரிய ரோவரை அனுப்பி சந்திரனின் மேற்பரப்பை விரிவாக ஆய்வு செய்ய உள்ளோம். இவ்வாறு நாராயணன் தெரிவித்தார்.
சந்திரயான்-1 திட்டம் கடந்த 2008-ம் ஆண்டிலும், சந்திரயான்-2 திட்டம் 2019-ம் ஆண்டிலும் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டன. சந்திரயான்-4 திட்டத்தை 2027-க்குள் நிறைவேற்ற இஸ்ரோ இலக்கு நிர்ணயித்துள்ளது. இந்த திட்டத்தின் மூலம் நிலவின் மேற்பரப்பில் உள்ள மாதிரிகளை சேகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
சந்திரயான் -5 மற்றும் 6-வது திட்டங்களை அடுத்த பத்தாண்டுகளுக்குள் நிறைவேற்ற இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. இது, விண்வெளித் துறையில் 44 பில்லியன் டாலர் மைல்கல்லை தொடுவதற்கு ஏதுவாக அமையும்.
சந்திரயான் திட்டங்களைத் தொடர்ந்து ககன்யான் திட்டத்தையும் இஸ்ரோ செயல்படுத்த உள்ளது. இது, விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் திட்டமாகும்.