சென்னை: டாஸ்மாக் தலைமையகத்தை இன்று (மார்ச் 17) முற்றுகையிடும் போராட்டத்தை தமிழக பாஜக அறிவித்திருந்த நிலையில், சென்னையில் உள்ள அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகளின் வீடுகளில் காவல் துறையினர் அதிக எண்ணிக்கையில் குவிக்கப்பட்டுள்ளனர். முன்னாள் மாநிலத் தலைவர் தமிழிசை வீட்டின் முன்பு காவலர்கள் முகாமிட்டுள்ளனர். அவர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டு உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே, பாஜக மாநிலச் செயலாளர் வினோஜ் பி.செல்வம் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தப் போராட்டத்துக்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பாஜக உறுப்பினர்கள் சென்னை நோக்கி வந்த நிலையில், அவர்களை காவலர்கள் தடுத்து வைத்ததாக எக்ஸ் தளத்தில் வினோஜ் பி.செல்வம் பதிவு வெளியிட்டிருந்தார். ‘இது ஜனநாயகமா?’ என்றும் அவர் கேள்வி எழுப்பி இருந்தார்.
மேலும், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் மூத்த தலைவர்கள் வீடுகளின் முன்பும் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். இந்தப் போராட்டத்துக்கு போலீஸ் தரப்பில் அனுமதி மறுக்கப்பட்டுள்ள காரணத்தால் முன்னெச்சரிக்கையாக போலீஸார் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.
முன்னதாக, டாஸ்மாக் மூலம் ரூ.1000 கோடி முறைகேடு நடந்துள்ளதற்கான ஆதாரங்கள் சிக்கியுள்ளதாக அமலாக்கத் துறை தெரிவித்திருந்தது. இந்த முறைகேட்டை கண்டித்து இன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என தமிழக பாஜக அறிவித்திருந்தது.
இது குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், “தமிழகத்தில் மதுபான விநியோக நிறுவனங்களில் நடைபெறும் அமலாக்கத் துறை சோதனையில் இருந்து மக்களின் கவனத்தை திசைதிருப்ப முதல்வர் ஸ்டாலின் முயற்சித்து வருகிறார். தற்போது கணக்கில் வராத ரூ.1000 கோடி பணம் லஞ்சமாகப் பெறப்பட்டதாக, மதுபான ஆலைகளில் இருந்து தொடர்புடைய ஆவணங்களை அமலாக்கத் துறை கண்டறிந்துள்ளது. இந்த விவகாரத்தில் தமிழக மக்களுக்கு பதிலளிக்க வேண்டிய கடமை முதல்வருக்கு உள்ளது.
மேலும், முதல்வர் பதவியில் தொடர தனக்கு தார்மிக உரிமை இருக்கிறதா என்றும் அவர் தன்னைத் தானே கேட்டுக்கொள்ள வேண்டும். திமுகவினர் நடத்தும் சாராய ஆலைகள் பணம் சம்பாதிப்பதற்காக நடத்தப்படும் டாஸ்மாக் நிறுவனத்தில் நடைபெற்றுள்ள ரூ.1000 கோடி ஊழல், தமிழகத்தையே உலுக்கியுள்ளது.
திமுகவின் இந்த மெகா ஊழலை கண்டித்து மார்ச் 17-ம் தேதி டாஸ்மாக் தலைமை அலுவலகம் அமைந்துள்ள சென்னை தாளமுத்து நடராசன் மாளிகையை முற்றுகையிடும் போராட்டம் நடைபெறும்” என்று குறிப்பிட்டிருந்தார். இந்த நிலையில் பாஜக தமிழக நிர்வாகிகளின் வீட்டின் முன்பு போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.