மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில் உள்ள அரசு மருத்துவமனையில் நேற்று திடீரென தீவிபத்து ஏற்பட்டது. இதில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 190-க்கும் மேற்பட்ட நோயாளிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
இதுகுறித்து அம்மாநில மக்கள் தொடர்பு துறை வெளியிட்ட அறிக்கை: குவாலியர் கம்ல ராஜா அரசு மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 1 மணியளவில் மகப்பேறு துறையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் (ஐசியு) உள்ள ஏசி பகுதியில் திடீரென தீப்பிடித்தது.
இதையடுத்து புகைமூட்டம் அதிகமானதையடுத்து, ஐசியுவில் சிகிச்சைப் பெற்று வந்த 13 பேர் உட்பட 190-க்கும் மேற்பட்ட நோயாளிகள் பாதுகாவலர்களால் பத்திரமாக மீட்கப்பட்டு வேறு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். பின்னர் தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து வந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
முதல் கட்ட விசாரணையில் இந்த தீவிபத்துக்கு மின் கசிவு காரணமாக இருக்கலாம் என்பது தெரியவந்துள்ளது. இருப்பினும், இந்த சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.