மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் நடந்த வன்முறை துரதிருஷ்டவசமானது என்று தெரிவித்துள்ள அம்மாநில துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, இது திட்டமிட்ட சதியா என்று போலீஸார் விசாரிப்பதாகக் கூறியுள்ளார். மேலும், மாநில மக்களை அமைதி காக்குமாறும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இன்று செய்தியாளர்களிடம் பேசிய துணை முதல்வர் ஷிண்டே, “நாக்பூரில் நடந்த சம்பவம் துரதிருஷ்டவசமானது. இதில் ஏதாவது திட்டமிட்ட சதி உள்ளதா என்று போலீஸார் விசாரித்து வருகின்றனர். இந்தச் சம்பவத்தில் நான்கு டிசிபி அளவிலான அதிகாரிகள் காயமடைந்துள்ளனர். சூழலை முதல்வர் ஆய்வு செய்து வருகிறார். பலர் வெளியே இருந்து வந்தவர்கள் என்று போலீஸார் தெரிவிக்கின்றனர். பெட்ரோல் குண்டுகள் கூட வீசப்பட்டுள்ளன. போலீஸாரும் தாக்கப்பட்டது துரதிருஷ்டவசமானது. இந்த சம்பவம் குறித்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். அனைவரும் அமைதியாக இருக்கும்படி நான் வேண்டிக்கொள்கிறேன்.
யார் இந்த அவுரங்கசீப், துறவியா அவர்? அவர் ஏதாவது நல்ல விஷயங்கள் செய்துள்ளாரா? என்று சத்ரபதி சம்பாஜி மகாராஜா வரலாறை வாசிப்பவர்கள், சாவா படத்தினை பார்ப்பவர்கள் அறிந்து கொள்ளலாம். அவர்கள் 40 நாட்கள் சத்ரபதி சம்பாஜி மகாராஜாவை துன்புறுத்தி உள்ளனர். அவுரங்கசீப் ஒரு துரோகி. அவரின் கல்லறை மகாராஷ்டிராவுக்கான கறை. நாக்பூரில் போராடியவர்கள் சத்ரபதி சம்பாஜி மகாராஜாவின் பெருமைக்காக போராடினார்கள்” என்று தெரிவித்துள்ளார்.
ஊரடங்கு உத்தரவு: அவுரங்கசீப் சமாதியை அகற்றக் கோரி வன்முறை நடந்த நிலையில் மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் பல்வேறு பகுதிகளிலும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. பாரதிய நியாய சன்ஹிதா சட்டப்பிரிவு 163-ன் கீழ் இந்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது என்று காவல்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து நாக்பூர் காவல் ஆணையர் ரவீந்திர குமார் சிங்கால், மறு உத்தரவு வரும்வரை இந்த ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் என்று கூறியுள்ளார். கோட்வாலி, கணேஷ்பேத், லக்கட்கஞ்ச், தேஷில், சாந்திநகர், பச்பாவ்லி, சக்கர்தரா, நந்தவனம், இமாவாடா, யோசோதரா நகர், கபில் நகர் உள்ளிட்ட காவல் சரகங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் இந்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
நடந்தது என்ன?: முன்னதாக நேற்று (மார்ச் 17) நாக்பூரின் மஹல் பகுதியில் உள்ள சிவாஜி சிலை அருகே விஷ்வ இந்து பரிஷத் மற்றும் பஜ்ரங் தள அமைப்பினர் என 200 முதல் 250 பேர் திரண்டனர். அவர்கள் அவுரங்கசீப் சமாதியை அகற்ற வேண்டும் எனக் கோரி கோஷங்களை எழுப்பினர். அவுரங்கசீப்பின் உருவப்படம் கொண்ட போஸ்டர்களை எரித்தனர். இந்நிலையில் அந்தப் போராட்டத்தின் போது இஸ்லாமியர்களின் புனித நூல் எரிக்கப்பட்டதாக வதந்திகள் பரவியது.
இதன் எதிரொலியாக சுமார் இரவு 7.30 மணியளவில் பல்தர்புராவில் 100-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் திரண்டனர். அவர்கள் சட்டம் ஒழுங்குக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் வன்முறையில் ஈடுபட்டனர். கடைகளை சூறையாடுவது, வாகனங்களை சேதப்படுத்துவது, தீ வைப்பது போன்ற சம்பவங்களில் ஈடுபட்டனர்.
மகாராஷ்டிரா சத்ரபதி சம்பாஜி நகர் மாவட்டம் குல்தாபாத்தில் முகலாய மன்னர் அவுரங்கசீப்பின் சமாதி உள்ளது. 1707 மார்ச் 3-ம் தேதி அவுரங்கசீப் இறந்தபின் அவரது விருப்பத்தின் பெயரில் இங்கு உடல் புதைக்கப்பட்டது. அந்த கல்லறையை பொதுமக்கள் பார்வையிட்டு செல்கின்றனர். இந்திய தொல்லியல் துறையால் பாதுகாக்கப்பட்ட வரலாற்று சின்னமாக இந்த கல்லறை உள்ளது.
இந்நிலையில் இந்த சமாதியை அகற்ற வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. பாலிவுட் வரலாற்று திரைப்படம் ‘சாவா’ தான் அவுரங்கசீப் கல்லறையை அகற்ற வேண்டும் என்பதற்கு காரணமாகியுள்ளது. சத்ரபதி சிவாஜியின் மகன் சம்பாஜி மகராஜின் கதையான இந்த திரைப்படம் குறித்து மகாராஷ்டிராவின் பட்ஜெட் கூட்டத்தொடரில் விவாதம் எழுந்தது.