அமெரிக்க பொருட்களின் மீதான வரியை இந்தியா நிச்சயமாக குறைக்கும் என்று அதிபர் டொனால்டு ட்ரம்ப் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் பொருட்களுக்கு அதிகம் வரிவிதிக்கும் நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு பரஸ்பர வரி விதிப்பை ஏப்ரல் 2 முதல் அதிகரிக்கப் போவதாக ட்ரம்ப் அச்சுறுத்தி வரும்வேளையில் அவர் இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.
செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அமெரிக்க-இந்திய உறவு குறித்த கேள்விக்கு ட்ரம்ப், “இந்தியாவுடன் மிகச்சிறந்த நட்புறவு உள்ளது. ஆனால், ஒரே பிரச்சினை என்னவென்றால் உலகிலேயே அதிக வரிவிதிக்கும் நாடாக இந்தியா உள்ளது. அவர்கள் அநேகமாக அமெரிக்க பொருட்களின் மீதான வரியை குறைப்பார்கள் என்று நம்புகிறேன். ஆனால், ஏப்ரல் 2 அன்று இந்தியா எங்களிடம் வசூலிக்கும் அதே வரியை நாங்கள் திரும்பவும் அவர்களிடமிருந்து வசூலிப்போம்” என்றார்.
இந்தியாவில் தங்களது பொருட்களை விற்பது கடினமாக உள்ளதாகவும், இதனால், அமெரிக்க பொருட்களின் மீது விதிக்கப்படும் வரியை இந்தியா குறைக்க ஒப்புக்கொண்டதாகவும் ட்ரம்ப் இந்த மாத தொடக்கத்தில் தெரிவித்திருந்தார்.
ஆனால், இதுதொடர்பாக நாடாளுமன்ற குழுவிடம் பேச்சுவார்த்தை தொடர்ந்து வருவதாகவும், அமெரிக்காவின் பொருட்களுக்கு வரியை குறைப்பது குறித்து இதுவரை எந்த உடன்பாடும் ஏற்படவில்லை என்று வர்த்தக செயலர் சுனில் பார்த்வால் ஏற்கெனவே இந்த விவகாரத்தில் விளக்கமளித்துள்ளார்.