பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி, சிந்துபாத், சித்தா படங்களின் இயக்குநர் எஸ்.யு. அருண்குமார் – சீயான் விக்ரம் காம்போவில் உருவாகியிருக்கும் `வீர தீர சூரன் – பாகம் 2′ திரைப்படம் மார்ச் 27-ம் தேதி வெளியாகவிருக்கிறது. இப்படத்தில், எஸ்.ஜே. சூர்யா, மலையாள நடிகர் சுராஜ், துஷாரா விஜயன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர்.

இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ்குமார் இப்படத்துக்கு இசையமைத்திருக்கிறார். இந்த நிலையில், வீர தீர சூரன் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், அருண்குமார், விக்ரம், எஸ்.ஜே. சூர்யா, துஷாரா விஜயன், ஜி.வி. பிரகாஷ்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய அருண்குமார், “இவ்வளவு நல்ல மனிதர்கள்கூட வேலை பார்க்கிற பாக்கியம் யாருக்கு கிடைக்கும்னு தெரில. நான் மதுரை சிந்தாமணி தியேட்டர்ல ‘தூள்’ படத்தை பார்த்தேன். போலீஸ்கிட்ட அடி வாங்கிட்டுப் போய் அந்தப் படம் பார்த்தேன். இன்னைக்கு அந்த நடிகரை வச்சு இயக்கியிருக்கேன். அவருக்கு இது 62வது படம். ஆனால், இன்னைக்கும் என்னபா பண்ணனும்னு கேட்பாரு.

இந்த வார்த்தை எனக்கு கொஞ்சம் பிரஷர். ஏன்னா, அந்த வார்த்தைக்கு நான் முதல்ல தயாராகி இருக்கணும். நான் ஏற்கனவே விக்ரம் சார்கூட வேலை பார்க்க வேண்டியது. அது அப்போ நடக்கல. இன்னைக்கு நடந்திருக்கு. இன்னைக்கு தொகுப்பாளினி கி.கி இருக்காங்க. அந்த நாளைய இயக்குனர் விஷயங்களெல்லாம் நினைவுக்கு வருது. அதே சிந்தாமணி தியேட்டர்ல நியூ படம் பார்த்திருக்கேன். இன்னைக்கு எஸ்.ஜே. சூர்யா வச்சு டைரெக்ட் பண்ணியிருக்கேன். விக்ரம் சார்கூட தொடர்ந்து வேலை பார்க்கணும். அவர்கிட்ட இருந்து நிறைய விஷயங்கள் கத்துக்கலாம்.

இந்தப் படம் இரண்டாவது பாகம். அதுனால கொஞ்சம் சீக்கிரமாக தியேட்டருக்கு வாங்க. இந்த பாகம் 2 ஐடியா பெருமை கிடையாது. இதுக்கான ஐடியா கொடுத்ததும் விக்ரம் சார்தான். நான் நிறைய டைட்டில் சொன்னேன். அப்புறம் அவர் வீட்டில ஒரு நாள் சாப்பிட்டுட்டு இந்த தலைப்பு சொன்னேன். ‘சூப்பராக இருக்கு இது பாகம் 2’னு வச்சிடலாம்னு அவர்தான் ஐடியா கொடுத்தாரு. விதை அவர் போட்டதுதான்” என்று கூறினார்.