காவிரி டெல்டாவில் புதிய ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு ஒப்புதல் இல்லை – மத்திய அரசு தகவல்

புதுடெல்லி,

மயிலாடுதுறை எம்.பி. சுதா மக்களவையில், எண்ணெய் மற்றும் எரிவாயு ஆய்வுக்காக கடந்த 2014-ம் ஆண்டுமுதல் வழங்கப்பட்ட ஒப்பந்தங்கள் பற்றியும், மன்னார் வளைகுடா மற்றும் காவிரி டெல்டா மாவட்டங்களில் ஏதேனும் ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டதா? என்றும் கேள்விகள் கேட்டு இருந்தார்.

இதற்கு மத்திய பெட்ரோலியத்துறை இணை மந்திரி சுரேஷ்கோபி நேற்று எழுத்துப்பூர்வமாக பதில் அளித்தார். அந்த பதிலில் கூறப்பட்டு இருப்பதாவது:-

2014-ம் ஆண்டு முதல், மன்னார் வளைகுடாவில் எந்தவொரு ஆய்வு தொடர்பாகவும், யாருக்கும், எந்த ஒப்பந்தமும் வழங்கப்படவில்லை. தஞ்சாவூர் மாவட்டத்தின் 3 சட்டசபை தொகுதிகள் அடங்கிய மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதி உள்ளடங்கும் காவிரி டெல்டா மாவட்டங்களில் புதிய எண்ணெய் மற்றும் எரிவாயு (ஹைட்ரோ கார்பன்) ஆய்வு திட்டங்கள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. ஓ.என்.ஜி.சி. நிறுவனத்துக்கு 2 ஆய்வுத்தொகுதிகள் வழங்கப்பட்டது. ஆனால் தமிழ்நாடு அரசால் பெட்ரோலிய ஆய்வு உரிமம் வழங்கப்படாததால் அது கைவிடப்பட்டது.

இவ்வாறு பதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.