புதுடெல்லி: நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் அதிகாரபூர்வ வீட்டில் கட்டுக்கட்டாக பணம் கண்டுபிடிக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அதுகுறித்து டெல்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி டி.கே. உபாத்யாய், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி (சிஐஜே) சஞ்சீவ் கண்ணாவிடம் அறிக்கை சமர்ப்பித்தார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக உள் விசாரணையைத் தொடங்கிய நீதிபதி உபாத்யாய் பணம் கண்டுபிடிக்கப்பட்ட விவாகரம் தொடர்பான விசாரணையில் தான் சேகரித்த தகவல்கள் ஆதாரங்களை வெள்ளிக்கிழமை அளித்த தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். அவர், மார்ச் 20-ம் தேதி நடந்த உச்ச நீதிமன்ற கொலீஜிய கூட்டத்துக்கு முன்பாகவே விசாரணையைத் தொடங்கியிருந்தார். தற்போது உச்ச நீதிமன்ற கொலீஜியம் நீதிபதி உபாத்யாயின் அறிக்கையை ஆய்வு செய்து தேவையான நடவடிக்கை மேற்கொள்வதற்கான முடிவினை எடுக்கும்.
பணம் கண்டுபிடிப்பு: கடந்த வாரத்தில் ஹோலிப்பண்டிகையின் போது (மார்ச் 14) நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது. அப்போது நீதிபதி வீட்டில் இல்லை. விபத்து குறித்து வர்மா குடும்பத்தினர் தீயணைப்புத்துறைக்கு தகவல் கொடுத்தனர். தீயை அணைத்த தீயணைப்பு வீரர்கள் நீதிபதியின் வீட்டில் கட்டுக்கட்டாக பணம் கண்டுபிடித்தனர். எவ்வளவு பணம் கண்டுபிடிக்கப்பட்டது என்ற தகவல் வெளியிடப்படவில்லை.
முன்னதாக இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய டெல்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி டி.கே.உபாத்யாயாவிடம் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா கேட்டிருந்தார்.
கொலீஜியம் கூறுவது என்ன? நீதிபதி வர்மாவுக்கு எதிராக உள் விசாரணைத் தொடங்கப்பட்ட பின்பு, உச்ச நீதிமன்ற கொலீஜியம் வர்மாவை மீண்டும் அலகாபாக் நீதிமன்றத்துக்கே மாற்ற பரிந்துரைத்தது. மேலும் இடமாற்ற பரிந்துரையும், விசாரணையும் க இரண்டு தனித்தனி விவகாரங்கள். இரண்டுக்கும் தொடர்பு இல்லை என்று விளக்கம் அளித்திருந்தது.
இதனிடையே நீதிபதி வர்மா வெள்ளிக்கிழமை உயர் நீதிமன்றத்துக்கு வரவில்லை. விடுப்பு எடுத்திருந்தார். அவர் தற்போது விற்பனை வரி, ஜிஎஸ்டி, நிறுவன விவகாரங்களை விசாரணை செய்யும் ஒரு அமர்வுக்கு தலைமை தாங்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.