புதுடெல்லி: கலவரத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஆய்வு செய்வதற்காக உச்ச நீதிமன்ற நீதிபதிகள் குழு மணிப்பூர் சென்றுள்ளது.
மணிப்பூர் மாநிலத்தில் கடந்த 2023-ம் ஆண்டு மே 3-ம் தேதி மைதேயி மற்றும் குகி ஆகிய இரு பழங்குடியினத்தவர் இடையே மோதல் ஏற்பட்டது. இது கலவரமாக மாறியது. 2 ஆண்டுகளாக நடைபெற்று வரும் கலவரத்தால் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். ஆயிரக்கணக்கானோர் புலம்பெயர்ந்து முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
கலவரத்தை கட்டுப்படுத்தும் பணியில் துணை ராணுவம் ஈடுபட்டபோதும் நிலைமை மாறவில்லை. 2 ஆண்டுக்கும் மேலாக கலவரம் தொடர்கிறது. இந்த சூழ்நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் அம்மாநில முதல்வர் பிரேன் சிங் பதவி விலகினார். இதையடுத்து அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. ஆனாலும் கலவரம் ஓயவில்லை.
இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. மணிப்பூர் நிலவரத்தை உச்ச நீதிமன்றம் உன்னிப்பாக கவனித்து வருகிறது. இந்த சூழ்நிலையில், உச்ச நீதிமன்ற நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான நீதிபதிகள் குழு நேற்று இம்பால் சென்றடைந்தது.
நீதிபதிகள் சூர்ய காந்த், விக்ரம் நாத், எம்.எம்.சுந்தரேஷ், கே.வி.விஸ்வநாதன் மற்றும் என்.கோட்டீஸ்வர் உள்ளிட்டோர் அடங்கிய இக்குழுவினர் கலவரத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட சூரசந்த்பூர் மாவட்டத்துக்கு சென்றனர். அங்கு இனக் கலவரத்தால் பாதிக்கப்பட்டு முகாம்களில் தங்கியுள்ள மக்களை நீதிபதிகள் குழு சந்தித்து பேசியது. அப்போது அவர்களின் குறைகளை கேட்டறிந்தனர். மேலும் இதர முகாம்களில் உள்ள மக்களையும் அவர்கள் சந்தித்துப் பேச உள்ளனர்.
இனக்கலவரத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் பிரச்சினைகளை கேட்டறிந்து, அவர்களுக்கு மனிதாபிமான மற்றும் சட்ட ரீதியான உதவிகள் வழங்குவதை நோக்கமாகக் கொண்டு இக்குழு அங்கு சென்றுள்ளது.
மணிப்பூர் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான நடவடிக்கையில், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் குழுவினரின் இந்த பயணம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என கருதப்படுகிறது.
இதனிடையே, சூரசந்த்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு முகாமில் இருந்து கடந்த வியாழக்கிழமை காணாமல் போன 9 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அவரது தொண்டை உள்ளிட்ட பல இடங்களில் காயம் இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அந்த சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்திருக்கலாம் என தகவல் வெளியாகி உள்ளது.